

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி. இந்த ஏரி 8 கிராம எல்லைகளில் 2,591.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வந்தவாசி வட்டத்தில் உற்பத்தியாகும் கிளியாற்றில் இருந்தும், உத்திரமேரூர் பகுதியில் உற்பத்தியாகும் நெல்வாய் மடுவு மூலமும் தண்ணீர் வருகிறது.
இந்த ஏரியில் உள்ள 5 தலைப்பு மதகுகள் மூலம் 2,852.55 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பயன்பெறுகின்றன. இந்த ஏரி நீர் 30 ஏரிகளுக்கு கால்வாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு 4,751.90 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. மொத்தமாக மதுராந்தகம் ஏரி மூலம் 7,604.45 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. விளகாம், முருகஞ்சேரி, முன்னூத்திகுப்பம்,கத்திரிச்சேரி, விழுதமங்கலம், முள்ளி, வளர்பிறை, கடப்பேரி, மதுராந்தகம் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஏரி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மதுராந்தகம் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அறிவிக்கப்பட்டு எந்தப் பணியும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ரூ.125 கோடி மதுராந்தகம் ஏரியை தூர்வார ஒதுக்கீடூ செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த நிதி மூலம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி 3,950 மீட்டர் நீளமுடைய கரையை பலப்படுத்துதல், இங்கு ஆழப்படுத்த எடுக்கப்படும் மண்ணை எதிர்புறத்தில் உள்ள 1,482 ஏக்கர் நிலங்களில் கொட்டி உயர்த்துதல், வரத்து கால்வாய்கள் மற்றும் உபரி நீர் கால்வாய்களை தூர்வாருதல், 6 கலங்களின் மட்டத்தை 50 செமீ உயர்த்தி ஏரியின் கொள்ளவை 694 மில்லியன் கன அடியில் இருந்து 791 மில்லியன் கன அடியாக உயர்த்துதல், ஏரியின் கரை அருகே 1,650 மீட்டர் நீளத்துக்கு புதிய தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு தேர்தலுக்குமுன், இந்த ஏரியை தூர்வார அரசாணை பிறப்பிக்கப்பட்டு முதல் கட்டமாக ரூ.1 கோடி மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படாமல் நிதி திரும்பிச் சென்றது. இதுவரை இந்த ஏரியை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் ஒப்பந்தப் புள்ளியும் கோரப்படவில்லை. எந்தப் பணியும் நடைபெறவில்லை. இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு கூறும்போது, “கடந்த ஆண்டு அதிமுக அரசு மதுராந்தகம் ஏரியை தூர்வாருவோம் என்று அறிவித்துவிட்டு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இதற்கான நிதியை ஒதுக்கி மதுராந்தகம் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.