Published : 16 Feb 2016 09:14 AM
Last Updated : 16 Feb 2016 09:14 AM

நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி கூட்டாளி கைது

மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி யின் கூட்டாளி ஒருவரை உயர் நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவின்பேரில் சிபிஐ போலீஸார் கைது செய்தனர். அவரை மார்ச் 11-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரையில் ஒரு நாளிதழ் அலு வலகம் மீது 2007-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வினோத், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகி யோர் கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர். இவர்களை மதுரை சிபிஐ நீதிமன்றம் 2009-ல் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வினோத்தின் தாயார் பூங்கொடி சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் இழுத்தடித்து வந்தனர். இதனால் அவர்களை கைது செய்து, மேல்முறையீடு மனு மீதான விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கக்கோரி சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

அதை விசாரித்த நீதிபதிகள், அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 12 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து ஜன.5-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த 12 பேரையும் கைது செய்து மார்ச் 11-க்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சரவணமுத்துவை சிபிஐ போலீஸார் கமுதியில் பிப்.12-ம் தேதி கைது செய்தனர். அவரை நீதிபதிகள் ஏ.செல்வம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் முன்பு சிபிஐ போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை மார்ச் 11-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, சரவணமுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x