Published : 13 Aug 2021 09:50 PM
Last Updated : 13 Aug 2021 09:50 PM

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் மறைவு

மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் திடீர் உடல் நலக்குறைவால் மறைந்தார். அவருக்கு வயது (77).

ஆதீனம் குருமகா சன்னிதானமான அருணகிரிநாதருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த 9-ம் தேதி திடீர் என உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மதுரை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மதுரை ஆதீனம் வரலாறும் சிறப்பும்:

தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த ஆதீனம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு
திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த மடத்தின்கீழ் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோயில், திருப்புறம்பியம் காசிநாத சுவாமி கோயில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. இந்த ஆதீனத்துக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உள்ளன.

நித்யானந்தாவால் ஏற்பட்ட சர்ச்சைகள்:

2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமனம் செய்ததால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்
பட்டன. இந்நியமனத்தை காஞ்சி, திருவாவடுதுறை ஆதீன மடங்கள் உள்ளிட்ட அனைத்து சைவ மடங்களும் கடுமையாக எதிர்த்தன.
ஆனாலும், நித்யானந்தாவை நீக்க முடியாது என ஆதீனம் அருணகிரிநாதர் அறிவித்தார்.

இந்நியமனத்துக்கு பல்வேறு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து, பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்கப் போவதாகத் தகவல்கள் பரவின. இதையடுத்து 2012-ம் ஆண்டே நித்யானந்தாவை வாரிசுப் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிடுவதாக மதுரை ஆதீனம் அறிவித்தார். இதையடுத்தே நித்யானந்தா நியமனம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x