Last Updated : 13 Aug, 2021 07:19 PM

 

Published : 13 Aug 2021 07:19 PM
Last Updated : 13 Aug 2021 07:19 PM

60 வயது கடந்தோரை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கத் தடைகோரி வழக்கு: உள்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

மாவட்ட நீதிமன்றங்களில் 60 வயது கடந்தவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் உள்துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.சரவணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் நியமனங்கள் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுவதில்லை. ஆட்சிக்கு வரும் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுகின்றனர். அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட பின்னர் அவர்கள் சார்ந்த கட்சிக்குச் சாதகமாகச் செயல்படுகின்றனர்.

மாவட்ட நீதிமன்றங்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கக்கூடாது என்பது விதியாகும். தற்போது இந்த விதியை மீறி 60 வயதுக்கு மேற்பட்டவர்களையும் தகுதி அடிப்படையில் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கலாம் எனக் கூடுதல் தலைமைச் செயலர் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜூலை 27-ல் கடிதம் அனுப்பியுள்ளார்.

மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி முடிவடைந்துள்ளது.

மாவட்ட நீதிமன்றங்களுக்குத் திமுக வழக்கறிஞர்கள் கொண்ட அரசு வழக்கறிஞர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கண்துடைப்புக்காக வழக்கறிஞர்களிடம் விண்ணப்பம் பெற்று வருகின்றனர். விரைவில் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்த கடிதம் ஆளுநரின் அனுமதி பெறாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, 60 வயது கடந்தவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க அனுமதி வழங்கி ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை ரத்து செய்து, மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்காகத் தனி விதிகளை உருவாக்கி, அதனைப் பின்பற்றி நியமனங்களை மேற்கொள்ளவும், அதுவரை கடிதத்தைச் செயல்படுத்தத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன் வாதிட்டார். பின்னர் மனு தொடர்பாக உள்துறைச் செயலர், கூடுதல் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x