Published : 13 Aug 2021 05:14 PM
Last Updated : 13 Aug 2021 05:14 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோர விபத்து: லாரி மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு  

லாரி மீது கார் மோதி உருகுலைந்து கிடக்கிறது.  

திருவண்ணாமலை 

கண்ணமங்கலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த முனியந்தாங்கல் கிராமத்தில் லாரியும் காரும் இன்று (13-ம் தேதி) பிற்பகல் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 1 குழந்தை, 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். லாரி ஓட்டுநர் தப்பித்து ஓடிவிட்டார்.

இந்த விபத்து பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையிலான காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 5 பேர் மீட்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 6 பேர் உட்பட 11 பேரும், வேலூர் அடுத்த விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும், வேலூரில் இருந்து செங்கம் அடுத்த புதூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்றபோது கோர விபத்து நடைபெற்றுள்ளது.

காரின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடி, எதிரே வந்த லாரியில் மோதியதாக காவல்துறையினர் கூறுகின்றனர். உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த கோர விபத்தால் திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x