

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அதில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனில் குறிப்பிடப்படுள்ள அம்சங்கள்:
* நபார்டு வங்கியின் ஊரக கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் உதவியுடன் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 123.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* விடுதிகளில் பயிலும் மாணவர்களின் மாதாந்திர சில்லறைச் செலவினக் கட்டண உதவித் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும். தற்போதுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளை மேம்படுத்த சிறப்பு மூலதன ஒதுக்கீடாக 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணத்தினாலும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரச் செய்ததினாலும், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்தக் கல்வியாண்டில் இருந்து வழங்க, ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சமூகநீதி பாதுகாக்கப்பட்டுள்ளது.