Published : 13 Aug 2021 10:32 AM
Last Updated : 13 Aug 2021 10:32 AM

10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக பட்ஜெட் தாக்கல்: அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளி, வெளிநடப்பு

10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

கடந்த பிப்.23-ம் தேதி முந்தைய அதிமுக அரசின் இடைக்கால பட் ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தற்போது திமுக ஆட்சி அமைத்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய பட்ஜெட் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். மேலும் முதல்முறையாக இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் துறைக்கான தனி பட்ஜெட், 14-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

இரண்டு பட்ஜெட் மீதான விவாதம் ஆக.16 தொடங்கி 19-ம் தேதி முடிவடைகிறது. அதன்பின், ஆக.23-ம் தேதி முதல் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது.

இந்நிலையில், தற்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக சட்டப்பேரவையில் தங்களுக்குப் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றுகூறி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக அமருமாறும், அதிமுகவினருக்குப் பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து வலியுறுத்தினார்.

எனினும் அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டு, வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x