Published : 06 Feb 2016 07:12 PM
Last Updated : 06 Feb 2016 07:12 PM

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் தொடர்வார்: அமித்ஷா அறிவிப்பு

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்து நீடிப்பார் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக தேசிய அலுவலகச் செயலாளர் அருண்குமார் ஜெயின் வெளியிட்ட செய்தியில், ‘தமிழக பாஜகவின் தற்போதைய தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அப்பொறுப்பில் தொடர்வார் என தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

பாஜக கட்சி விதிகளின்படி கிளை கமிட்டி முதல் அகில இந்திய தலைவர் வரை அனைத்து பதவிகளுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். 2009, 2012-ல் நடந்த தேர்தல்களில் மாநிலத் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று அவர் மத்திய அமைச்சர் ஆனதால் 2014 ஆகஸ்ட் 16-ம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தேர்தல் நடந்து 3 ஆண்டுகள் முடிந்துவிட்டதால் பாஜக உள்கட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 15-ம் தேதி தொடங்கியது. கிளை, நகர, ஒன்றிய அளவில் தேர்தல் தொடங்கிய நிலையில் கனமழையால் திட்டமிட்டபடி டிசம்பர் இறுதிக்குள் மாநிலத் தலைவர் தேர்தலை நடத்த முடியவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் கட்சி தேர்தலை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவியில் தமிழிசை சவுந்தரராஜன் தொடர்வார் என அமித்ஷா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x