

திமுக அரசு மின் கட்டண விவகாரத்தில் மக்களிடம் இப்படி மறைமுகமான கட்டணக் கொள்ளையை அரங்கேற்றுவது ஏன் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஆக. 12) தன் ட்விட்டர் பக்கத்தில், "அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
பயன்பாட்டு அளவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, மூன்று மடங்கு வரை அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையிலும் நியாயம் அல்ல.
கரோனா பேரிடரால் பொருளாதார ரீதியான பாதிப்பை சந்தித்து வரும் மக்களுக்கு அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வு, கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.
வெளிப்படையான நிர்வாகம் பற்றி நிறைய பேசும் திமுக அரசு மின் கட்டண விவகாரத்தில் மக்களிடம் இப்படி மறைமுகமான கட்டணக் கொள்ளையை அரங்கேற்றுவது ஏன்?" என பதிவிட்டுள்ளார்.