Published : 12 Aug 2021 04:33 PM
Last Updated : 12 Aug 2021 04:33 PM

ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் பதுக்கல்: திருப்பூரில் 6 பேர் கைது

திருப்பூர் காந்தி நகரில் உள்ள மதுபானக் கூடத்தில் பதுக்கப்பட்ட டாஸ்மாக் பாட்டில்கள்

திருப்பூர்

திருப்பூரில் மதுபானக் கூடங்களில் இருந்து முறைகேடாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரத்து 500 மதுபாட்டில்களை போலீஸார் இன்று பறிமுதல் செய்து 6 பேரைக் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலை ஒட்டி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளிலும் 5 மணிக்கு மேல் விற்பனை செய்வதற்காக, மதுபாட்டில்களைப் பதுக்கி விற்பனை நடைபெறுவதாகத் தெரிவித்தனர். சில இடங்களில் மாலை 5 மணிக்கு மேல் மதுபாட்டில்களைப் பதுக்கி விற்பதாகப் புகார்கள் வந்தன. மதுபானக் கூடங்களிலேயே ஆங்காங்கே மதுபாட்டில்களை மிக அதிக விலைக்குப் பதுக்கி விற்கின்றனர்.

மதுபானக் கூடங்களைக் குத்தகை எடுத்தவர்களின் காலம் தற்போது முடிவடையும் தருவாயில் இருப்பதால், பலர் வருவாய் இல்லாத நிலையில் இப்படிச் செய்ய முயன்றுள்ளனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன், கலால் உதவி ஆணையர் சுகுமார் மற்றும் அனுப்பர்பாளையம் போலீஸார் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது திருப்பூர் காந்திநகர் பகுதியில் எதிரெதிரே உள்ள இரண்டு மதுபானக் கூடங்கள் மற்றும் கூலிபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களைப் பதுக்கி அதிக விலைக்கு விற்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சுமார் 3 ஆயிரத்து 500 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்துத் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் கூறும்போது, ''மதுபானக் கூட உரிமையாளர்கள் மகாலிங்கம் (37), தனபால் (40) மற்றும் மதுபானக் கூட ஊழியர்கள் மகாதேவன், கர்ணன், விஜயகுமார் மற்றும் ஆனந்த் என 6 பேர் மீது, அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x