Published : 13 Jun 2014 05:00 PM
Last Updated : 13 Jun 2014 05:00 PM

புகாரை விசாரிக்க அலட்சியம்: மேலூர் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. சஸ்பெண்ட்

கொலை செய்யப்பட்ட விறகு வெட்டும் தொழிலாளியின் மனைவி அளித்த புகார் மீது வழக்கு பதியாமல் அலட்சியம் காட்டியதாக மதுரை மாவட்டம் மேலூர் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. ஆகியோர் வியாழக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலூர் அருகேயுள்ள தனியாமங்கலம் பாரதிநகரைச் சேர்ந்தவர் அய்யப்பன் (45). விறகு வெட்டும் தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் மதிவாணன். விறகு வியாபாரி. சில தினங்களுக்கு முன் மதிவாணன் வெட்டி, குவித்துவைத்திருந்த விறகுகளைக் காணவில்லை. இதுபற்றி விசாரித்தபோது அய்யப்பன் அவற்றைத் திருடியிருக்கலாம் எனத் தெரியவந்தது. இதுபற்றி கேட்டபோது அய்யப்பன், மதிவாணன் இடையே தகராறு ஏற்பட்டது.

கடந்த 4-ம் தேதி மதிவாணன் மற்றும் சிலர் அய்யப்பனை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் தாக்கியதில், எதிர்பாராமல் அய்யப்பன் இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மதிவாணன் தரப்பினர் அய்யப்பனின் உடலை 7 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டம் மல்லாக்கட்டை என்ற இடத்திலுள்ள குவாரிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு உடலோடு கல்லை கட்டி குவாரி நீருக்குள் தூக்கிப் போட்டுவிட்டு ஊருக்கு வந்துவிட்டனர்.

இதற்கிடையே அய்யப்பன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியுற்ற அவரது மனைவி கல்யாணி கீழவளைவு போலீஸில் எஸ்.ஐ. தயாளனிடம் 4-ம் தேதியே புகார் செய்தார். அப்போது மதிவாணன் உள்ளிட்ட சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் அந்த புகாரை போலீஸார் விசாரிக்கவில்லை.

இதையடுத்து 6-ம் தேதி மேலூர் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியனை சந்தித்தும் புகார் அளித்தார். அவரும் அந்த மனுவை விசாரிக்காமல் கிடப்பில் போட்டார். இதனால் 9-ம் தேதி எஸ்.பி. விஜயேந்திரபிதாரியைச் சந்தித்து கல்யாணி புகார் செய்தார்.

இதன்படி எஸ்.பி. உத்தரவின்பேரில் ஏ.டி.எஸ்.பி.க்கள் சியாமளா தேவி, கோபால்சாமி தலைமையிலான தனிப்படையினர், காணாமல்போன அய்யப்பன் குறித்த விவரங்களை விசாரிக்கத் தொடங்கினர்.

இதனால் போலீஸார் தன்னை நெருங்கிவிட்டதாக உணர்ந்த மதிவாணன் புதன்கிழமை மேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்து அய்யப்பனை கொலை செய்த உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த தகவலின்பேரில் குவாரியில் மிதந்துகொண்டிருந்த அய்யப்பன் சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து கல்யாணி அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிய மேலூர் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், கீழவளைவு எஸ்.ஐ. தயாளன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மதுரை சரக டிஐஜி அனந்த்குமார் சோமானி உத்தரவிட்டுள்ளார்.

உடலை வாங்க மறுப்பு

இதற்கிடையே, இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும், கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், மதிவாணன் தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்ட போலீஸாரை பணிநீக்க வேண்டும் என வலியுறுத்தி அய்யப்பனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

இதனால் அங்கு அதிகளவில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x