Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM

மனைவி மீது சந்தேகம்: இளைஞரை கொலை செய்தவர் கைது

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கம்- விஷ்ணுநகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(35). இவர், செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.

இவரது பட்டறையில், சோழவரம் அருகே பாடியநல்லூர், ஜோதி நகரைச் சேர்ந்த லட்சுமணன்(47) அவரது மனைவி லோகேஸ்வரி(37) கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், ராஜ்குமாருக்கும், லோகேஸ்வரிக்கும் இடையே தவறானநட்பு இருக்குமோ என, லட்சுமணனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பணிக்குச் செல்லக்கூடாது என லட்சுமணன் பலமுறை வலியுறுத்தியும் லோகேஸ்வரி அதை பொருட்படுத்தவில்லை. இதனால், கோபமடைந்த லட்சுமணன் நேற்று முன்தினம் இரவு வெல்டிங் பட்டறைக்கு சென்று அங்கிருந்த ராஜ்குமாரையும், லோகேஸ்வரியையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார்.

இதுகுறித்து, தகவலறிந்த சோழவரம் போலீஸார், படுகாயமடைந்த ராஜ்குமார், லோகேஸ்வரி ஆகியோரை மீட்டு, பாடியநல்லூர் ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில், ராஜ்குமார் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, லோகேஸ்வரி சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சோழவரம் போலீஸார் நேற்று லட்சுமணனை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x