Published : 12 Aug 2021 03:22 AM
Last Updated : 12 Aug 2021 03:22 AM

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: தேர்தல் அதிகாரிகளுக்கான மண்டல அளவிலான ஆய்வு கூட்டம்: மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் பங்கேற்பு

ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து வேலூர் மாவட்டம் சேர்க்காடு அருகே திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நேற்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது. அருகில், மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் சுந்தரவல்லி உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல் அதிகாரிகளுக்கான மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிகுமார் பங்கேற்றார்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு திரு வள்ளுவர் பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி களுக்கான, உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. அப்போது, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டன. அவற்றில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் முழுமையாக வகுக்கப்படாமல் இருந்ததால், அப்போது அந்த மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 29 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன. தொடர்ந்து, 2020-ம் ஆண்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுடன் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என எதிர் பார்க்கப்பட்டது.

அதற்குள், நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்ததால் விடுபட்ட இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு விடுபட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முதற் கட்ட மாக தேர்தல் நடத்த வேண்டும் என நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அதேநேரத்தில், 9 மாவட்டங் களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தலை வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

அதன் அடிப்படையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல் வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலுள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றி யங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்திட மாநில தேர்தல் ஆணையம் திட்ட மிடப்பட்டுள்ளது.

இதையொட்டி, தமிழக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான மண்டல அளவிலான முதற்கட்ட ஆய்வுக் கூட்டம் மற்றும் தேர்தல் அதி காரிகளுக்கான பயிற்சிக் கூட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிகுமார் தலைமை வகித்து பேசும்போது, ‘‘அனைத்து அதிகாரமும் பொது மக்களிடம் இருந்து தான் உருவாகிறது. வாக்கு அளிக்கும் மக்கள் தான், நமக்கும் அதி காரங்களை அளிக்கின்றனர். அதனால், பொதுமக்கள் விரும்பும் அரசு அமைந்திடவே ஒவ்வொரு தேர்தலும் நடத்தப்படுகிறது.

சமூக தேவைக்கு ஏற்ப சட்டங் களும், விதிகளும் மாறிக்கொண்டே இருக்கும். அதேபோல்தான், தேர்தல் சட்டங்களிலும் தேவைக்கு ஏற்ப திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு தேர்தல் சட்டங்களில் ஏற்பட்டுள்ள மாறு பாடுகளை அரசின் முதன்மை முகங்களாக விளங்கும் அரசு அலுவலர்கள் முழுமையாக அறிந்து விமர்சனங்களுக்கு இடமளிக்காமல் தேர்தலை நல்ல முறையில் நடத்தித்தர அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும்’’ என்றார்.

இக்கூட்டத்தில், தமிழக மாநில தேர்தல் ஆணைய செயலர் சுந்தரவல்லி, மாவட்ட ஆட்சியர்கள் பெ.குமாரவேல் பாண்டியன் (வேலூர்), ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் (ராணிப்பேட்டை), அமர் குஷ்வாஹா (திருப் பத்தூர்), மாவட்ட காவல் கண் காணிப்பாளர்கள் செல்வக்குமார் (வேலூர்), சிபி சக்கரவர்த்தி (திருப்பத்தூர்), தேஷ்முக் சேகர் சஞ்சய் (ராணிப்பேட்டை), மாவட்ட வருவாய் அலுவலர்கள், தேர்தல் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x