Last Updated : 11 Aug, 2021 07:01 PM

 

Published : 11 Aug 2021 07:01 PM
Last Updated : 11 Aug 2021 07:01 PM

அரசு அளித்த ரூ.1.8 லட்சம் விருதுத் தொகை: அடர்வனம் உருவாக்கச் செலவிட்ட இளைஞர்

கோவை பேரூர் குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர் மணிகண்டன்.

கோவை

மத்திய அரசு அளித்த ரூ.1.80 லட்சம் விருதுத் தொகையைக் கோவையில் அடர்வனம் உருவாக்கத் தன்னார்வ இளைஞர் ஒருவர் செலவிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கோவை குளங்கள் பாதுகாப்பு' அமைப்பு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகக் கோவையில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கும் களப் பணியில் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் உதவியோடு ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு மூலம் வெள்ளலூர் குளக்கரையில் 'மியாவாக்கி' முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும், அங்கு மூலிகை, மலர்ச் செடிகள் நட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நொய்யல் மற்றும் கோவையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகளைச் செய்துவரும் 'கோவை குளங்கள் பாதுகாப்பு' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டனுக்கு மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் 2019-ம் ஆண்டின் தென்னிந்தியப் பிரிவுக்கான ‘Best Water Warrior’ என்ற விருதைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழங்கியது. விருதுத் தொகையாக ரூ.1.80 லட்சம் வழங்கப்பட்டது.

அந்த விருதுத் தொகையுடன், தனியார் நிறுவனங்களின் உதவியுடன் பேரூர் பெரியகுளத்தின் கரையில் அடர் வனப்பூங்கா உருவாக்க மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் தன்னார்வலர்கள், மத்திய ரிசர்வ் காவல் படையினர் (சிஆர்பிஎஃப்) மற்றும் என்சிசி மாணவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.

இது தொடர்பாக மணிகண்டன் கூறும்போது, "பேரூர் பெரிய குளக்கரையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றியது. நீர்வளத் துறையின் அனுமதியுடன் அங்கிருந்த கட்டிடக் கழிவுகளைச் சுத்தம் செய்து நிலத்தைத் தயார் செய்து மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

தற்போது அந்த இடத்தில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட 200 வகையான நாட்டு மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடப்பட்டுள்ளன. இதற்காகக் குளங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆகாயத் தாமரை கழிவுகள் அடியுரமாகக் கொட்டப்பட்டுள்ளன. மேலும், மூன்று பக்கமும் வேலியிட்டு சொட்டு நீர்ப் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக சுமார் ரூ.6.50 லட்சம் செலவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x