கரோனா விதிமீறல்: சென்னையில் 933 வழக்குகள் பதிவு; 336 வாகனங்கள் பறிமுதல்

கரோனா விதிமீறல்: சென்னையில் 933 வழக்குகள் பதிவு; 336 வாகனங்கள் பறிமுதல்
Updated on
1 min read

தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் நேற்று (10.08.2021) கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 336 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாத 706 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''கரோனா வைரஸ் தொற்று நோய்ப் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.05.2021 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு 21.06.2021 காலை முதல் 23.08.2021 வரை தளர்வுகளுடன் கூடிய கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், முறையான தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்குப் பணிகளைத் தீவிரப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகரக் காவல் குழுவினர் நேற்று (10.08.2021) மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 315 இருசக்கர வாகனங்கள், 20 ஆட்டோக்கள் மற்றும் 1 கார் என மொத்தம் 336 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 706 வழக்குகளும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடர்பாக 01 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து கரோனா தொற்றைத் தடுக்க சென்னை பெருநகரக் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது''.

இவ்வாறு சென்னை பெருநகரக காவல்துறை தெரிவித்துள்ளது.

.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in