Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM

திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக புகார்- காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜர்

சென்னை

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஜெர்மன் பெண் அளித்த புகாரில், நடிகர் ஆர்யா காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து ஆர்யா திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த விட்ஜா என்பவர் சிபிசிஐடி போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யாத நிலையில், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி விட்ஜா சார்பில் ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், “நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது எனது கடனை செலுத்தி விடுவதாக ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷாவின் பெற்றோர் உறுதியளித்தனர். மேலும் ஆர்யாவும் 6 மாதத்தில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதியளித்தார். இதனால்தான் நடிகை சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்துகொள்ள நான் சம்மதித்தேன். ஆனால் ஆர்யா என்னை திட்டம்போட்டு ஏமாற்றிவிட்டார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், நடிகர் ஆர்யாவுக்கு எதிராக மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மீதான தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி போலீஸார் வரும் ஆக.17-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ஆர்யா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். இந்த விவகாரம் தொடர்பாக ஆர்யா அளித்த பதிலை வீடியோவாகவும், எழுத்து பூர்வமாகவும் போலீஸார் பெற்றுக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x