Last Updated : 10 Aug, 2021 08:23 PM

 

Published : 10 Aug 2021 08:23 PM
Last Updated : 10 Aug 2021 08:23 PM

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.15 கோடி மதிப்பில் மணல் கொள்ளை?- ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.15 கோடி மணல் கொள்ளை தொடர்பாக மாநகராட்சி தலைமைப் பொறியாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி தாக்கல் செய்த மனு.

''மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டப் பணிகள் மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் அரசு தலைமையில் நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிக்காக பெரியார் பேருந்து நிலையத்தில் 30 அடிக்குப் பள்ளம் தோண்டப்பட்டது.

அந்தப் பள்ளத்தில் இருந்த மணலைக் கனிமவளத் துறையினருக்குத் தகவல் தெரிவித்து ஓரிடத்தில் சேர்த்து வைத்திருக்க வேண்டும். ஆனால் தலைமை பொறியாளர் அரசு, கனிம வளத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் ரூ.15 கோடி மதிப்பிலான மணலைச் சட்டவிரோதமாகக் கடத்தி, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

இதுதொடர்பாகத் தலைமைப் பொறியாளர் அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு மீது ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி கணக்கில் வராமல் பணம் மற்றும் பரிசுப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர். எனவே அரசு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதிகள், இதுபோன்ற செயல்களைக் கடுமையான குற்றமாகப் பார்க்க வேண்டும். எனவே மனு தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் கனிமவளத்துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x