

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி இன்று சந்தித்தார்.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்பந்த திட்டப் பணிகள் கொடுக்கப்படுவதாகவும், மற்ற ஒப்பந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவுக்கு வந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர், அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி ஊழல்களில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடமும், மாநகராட்சி ஆணையரிடமும் சமீபத்தில் புகார் அளித்தார். தவிர, அதிமுக ஆட்சியில் ஒப்பந்தப் பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்துவிட்டதாக, கோவையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை மாநகர போலீஸில் நேற்று (ஆக. 09) புகார் அளித்து இருந்தார்.
இந்நிலையில், கோவை சுகுணாபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட கோவையில் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று (ஆக. 10) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமாக குனியமுத்தூரில் உள்ள வீட்டில் 11 மணிநேரமாக நீடித்த சோதனை, மாலையில் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி இன்று சந்தித்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு, சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவரும் நிலையில், அத்துறையின் டிஜிபி முதல்வரை சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.