Published : 09 Aug 2021 10:14 PM
Last Updated : 09 Aug 2021 10:14 PM

வரி வருவாய்க்கான பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்ய வேண்டும்: விசிக வலியுறுத்தல்

வரி வருவாய்க்கான பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.ப.தியாகராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை தமிழ்நாட்டின் நிதிநிலைமை கவலைக்குரியதாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் சரியாக நிதி மேலாண்மை திறம்பட கையாளப் படாததால் கடன்சுமை பெருகியது மட்டுமின்றி, வரி வருவாயின் பெரும்பகுதி வட்டி செலுத்துவதற்கே விரயமாகியுள்ளது. அதனால் வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலீடு செய்ய முடியாமல் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சிப் பாதையிலிருந்து நழுவி அதளபாதாளத்தில் சரிந்து வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

இத்தகைய இக்கட்டான நெருக்கடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு மீண்டும் அதனை வளர்ச்சியை நோக்கி கொண்டுபோய் சேர்க்கும் வலிமை திமுக அரசுக்கு உண்டு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நம்புகிறது.

தற்போதுள்ள கரோனா நெருக்கடி நிலையில் உடனடியாக வரிவருவாயைப் பெருக்குவதற்கு வாய்ப்பில்லை. எனவே, "வரியில்லாத பட்ஜெட்" என கடந்த காலங்களில் செய்தததைப்போல அல்லாமல், ஏழை - எளிய நடுத்தர மக்களை வரிச்சுமைகளிலிருந்து பாதுகாக்கும் வகையிலும் தொழிலதிபர்கள், பெருவணிகர்கள், ஒப்பந்ததார்ர்கள், நிலக்கிழார்கள் போன்ற செல்வந்தர்களிடமிருந்து நியாயமான வரிகளை வசூலிக்கக்கூடிய வகையிலும் வரி வருவாய்க்கான ஒரு பட்ஜெட் அறிக்கையைத் திமுக அரசு தாக்கல் செய்ய வேண்டுமென்பதே இன்றைய தேவையாகும்.

இன்றைய மிகமோசமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கில், அரசின் வருமானத்தை உயர்த்துவதற்காக மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற மக்கள் நலன்களுக்கு எதிரான வழிமுறைகளை தமிழக அரசு கையாளாது என்றும் நம்புகிறோம்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது கல்வி, சுகாதாரம் போன்ற முதன்மையான மனிதவள மேம்பாட்டுத் துறைகளில் அரசின் முதலீடு வெகுவாகக் குறைந்திருப்பது கவலை அளிக்கிறது. எனவே, அத்துறைகளில் முதலீடுகளைப் பெருக்கி அதனை சீர்செய்ய வேண்டிய தருணம் இது என்பதைச் சட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

அதுபோலவே கடந்த அதிமுக அரசு 'செலவுகளைக் குறைக்கிறோம்' என்னும் பெயரில் அரசு துறைகளில் புதிய ஊழியர்கள் நியமிப்பதைத் திட்டமிட்டுத் தவிர்த்துள்ளது.

இதனால் அரசாங்கத்தினுடைய செயல்பாடுகளே முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, புதிய பணியிடங்கள் மற்றும் பின்னடைவாக உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பி அரசாங்கத்தின் செயல்பாட்டை முடுக்க வேண்டியது இந்த அரசின் கடமையென்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

அத்துடன், தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி, மக்கள் நலத் திட்டங்களைக் கைவிடாமல், மக்களின் நம்பிக்கையை இழந்துவிடாத வகையில் அவற்றை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x