Last Updated : 09 Aug, 2021 08:43 PM

 

Published : 09 Aug 2021 08:43 PM
Last Updated : 09 Aug 2021 08:43 PM

கோவையில் கரோனா 3-வது அலையால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு: மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் தகவல்

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக். அருகில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன். படம் : ஜெ.மனோகரன்.

கோவை

கோவையில் கரோனா 3-வது அலையால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக, மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து ஊராட்சி தலைவர்களுடனும், அரசு அலுவலர்களுடனும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினருடனும், வணிக சங்க பிரதிநிதிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக 9) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து நடந்தது.

கோவை மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலரான அரசு முதன்மைச் செயலர் எம்.ஏ.சித்திக் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எதிர்ப்பு சக்தி குறைவு

இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக் செய்தியாளர்களிடம் இன்று (ஆக 9) மாலை கூறியதாவது: மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 200 பேர் புதியதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் கரோனா எதிர்ப்பு சக்தி குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், கோவையில் மக்களுக்கு கரோனா எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக உள்ளது. அதேசமயம், சென்னையில் கரோனா எதிர்ப்பு சக்தி 78 சதவீதமாக உள்ளது.

கரோனா எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருப்பதால், கோவையில் 3-வது அலையால் அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கரோனா பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவத்துறையினர் மட்டுமல்ல, மக்களும் தயாராக இருக்க வேண்டும். அடுத்த ஒரு மாதத்துக்குள் 3-வது அலை வர வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினிகளை கொண்டு கைகளை கழுவுதல் போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும். கோவையில் தற்போது கரோனா எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருக்கும் நிலையில், இதை அதிகரிக்க தடுப்பூசி மட்டுமே வழியாகும்.

கோவைக்கு கரோனா தடுப்பூசிகள் அதிகம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா 3-வது அலை ஒரே மாதத்தில் வர வாய்ப்புள்ளதால், மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஆக்சிஜன் படுக்கையை அதிகரிக்க, சென்னையில் இருந்து ஆக்சிஜன் டேங்க் கோவைக்கு மாற்றப்படுகின்றது. இம்முறை கரோனா பாதிப்பு எல்லா மாவட்டங்களிலும் அதிகரிக்க வாய்ப்பு குறைவு. எனவே, மருத்துவர்கள் தேவைப்பட்டால் பக்கத்து மாவட்டங்களில் இருந்து வரவழைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தயார் நிலையில் உள்ளோம்:

கோவையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக இருப்பதால், நிறைய உயிர்சேதம் இல்லாமல் 3-வது அலையை எதிர்கொள்ள முடியும். அடுத்த 2 மாதங்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இம்முறை குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தால், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்.

அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு 124 ஆக்சிஜன் படுக்கைகள், 82 ஐசியூ படுக்கைகளும், இஎஸ்ஐ மருத்துவமனையில் 40 ஆக்சிஜன் படுக்கைகளும், 30 ஐசியூ படுக்கைகளும் தயாராக உள்ளன. தேவையான மருத்துவர்களும் கோவையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x