Last Updated : 09 Aug, 2021 07:08 PM

 

Published : 09 Aug 2021 07:08 PM
Last Updated : 09 Aug 2021 07:08 PM

பலன் தரும் மரங்களை கணக்கெடுத்து பராமரிக்காத பொதுப் பணித்துறை; கண்டு கொள்ளாத வனத்துறை: ஆளுநர், அமைச்சரிடம் புகார்

பலன் தரும் மரங்களை கணக்கெடுத்து அதில் மஞ்சள் வர்ணம் பூசி கருப்பு நிறத்தில் எண்களை எழுதி பொதுப் பணித்துறை புதுச்சேரியில் பராமரிப்பதில்லை.

புதுச்சேரியில் பொதுப் பணித்துறையில் கட்டிடம் மற்றும் சாலைகள் தெற்கு பிரிவுக்கு சொந்தமான இடங்களில் 3,794 மரங்களும், கட்டிடம் மற்றும் சாலைகள் வடக்கு பிரிவில் 2911 மரங்களும், தேசிய நெடுஞ்சாலை பிரிவில் 1,612 மரங்களும், நீர்ப்பாசனக் கோட்ட இடங்களில் 14,169 மரங்களும் என பொதுப்பணித்துறைக்கு 22,466 மரங்கள் உள்ளன. இவற்றில் பலன் தரும் மரங்களான புளிய மரம், தென்னை, பனை மரங்களும் அடங்கும். பலன் தரும் மரங்கள் விவரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத்தலைவர் ரகுபதி விண்ணப்பித்தார். அப்போது பலன் தரும் மரங்கள் தொடர்பாக பொதுப்பணித்துறை கணக்கே எடுக்கவில்லை என்பது தெரியவந்தது.

இதுபற்றி ஆளுநர் தமிழிசை, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரிடம் மனு தந்துள்ள ரகுபதி கூறியதாவது:

”புதுச்சேரியில் பலன் தரும் மரங்களில் மஞ்சள் பெயிண்ட் அடித்து கருப்புக் கலரில் எண்களை எழுதி வரிசைப்படுத்தி பதிவேடுகள் மூலம் முறையே பராமரிக்காமல், பலன் தரும் மரங்களை இதுநாள் வரையில் கணக்கெடுக்காமல் பொதுப் பணித்துறையினர் உள்ளனர். இதுபோல் வனமே இல்லாத புதுச்சேரியில் செயல்பட்டு வரும் வனத்துறையினரோ சாலை ஓர மரங்களை கூட பராமரிக்காமல் உள்ளனர். இதன் மூலம் பொதுப் பணித்துறையினரும், வனத் துறையினரும் மரங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபடாமல் உள்ளனர் என தெரிகிறது .

புதுச்சேரியில் பொது இடங்களில் பலர் மரங்கள் நடுவதாக குறிப்பிடுகின்றனர். அதேநேரத்தில் பொதுப்பணித்துறை, வனத்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் ஆகியோரிடம் எத்தனை மரங்கள் நடப்பட்டன, எந்த வகையான மரங்கள் நடப்பட்டது என்கிற தகவலை தெரிவிப்பதில்லை.உயர்மின் அழுத்த கம்பிகள் செல்லும் பாதையில் நடப்பட்ட மரக்கன்றுகள் 2 ஆண்டுகள் கழித்து மரங்களாக வளர்ந்த பட்சத்தில் உயர்மின் அழுத்த கம்பிகள் மீது பட்டு மின் இழப்பு ஏற்படுகிறது. இதனால் மின் துறையினர் அந்த மரக்கிளைகளை வெட்ட ஒரு நாள் முழுவதும் அந்த பகுதியில் மின்தடை செய்து மின்துறை ஊழியர்கள் இந்த மரங்களை வெட்டு கின்றனர்.

முதலில் மரங்கள், எந்தெந்த பகுதிகளில் எத்தனை மரங்கள், எந்த வகையான மரங்கள் நடப்பட உள்ளது என கணக்கிட்டு, நடப்பட்ட மரக்கன்றுகளை முறையே பதிவேடுகள் மூலம் பராமரிக்கச் செய்ய வேண்டும். பொதுப் பணித்துறைக்கு சொந்தமான பலன் தரும் மரங்களில் மஞ்சள் பெயிண்ட் அடித்து கருப்பு கலரில் எண்கள் எழுதி பராமரிக்கவும், பலன் தரும் மரங்களை பொதுப் பணித்துறையினரே குத்தகைக்கு விடவும், சாலை ஓர மரங்களை வனத்துறை மூலம் பராமரிக்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x