Last Updated : 09 Aug, 2021 04:51 PM

 

Published : 09 Aug 2021 04:51 PM
Last Updated : 09 Aug 2021 04:51 PM

உளவியல் ஆலோசனைகள் வழங்கும் “வெளிச்சம்” திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்க: காரைக்கால் எஸ்.பி. வேண்டுகோள்

காரைக்கால் மாவட்டத்தில் தற்கொலை நிகழ்வுகளைத் தடுக்கும் வகையிலும், உளவியல் ஆலோசனைகள் வழங்கும் வகையிலும், காவல்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் “வெளிச்சம்” திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் காரைக்கால் தெற்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளர் கே.எல்.வீரவல்லபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் ஏற்பாட்டில், கடந்த மே மாதம் 27-ம் தேதி காவல்துறை சார்பில் வெளிச்சம் திட்டம் தொடங்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் தேசிய சராசரியை விடத் தற்கொலை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2020-ம் ஆண்டு சுமார் 100 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், குடும்பப் பிரச்சினை, உடல் மற்றும் மனநலன் சார்ந்த பிரச்சினை, கரோனா தொற்று மற்றும் அது சார்ந்த பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மன அழுத்தம், மன உளைச்சலில் உள்ள மக்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கவும், தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும், அவர்களின் மன அழுத்தததைக் குறைத்து ஆற்றுப்படுத்தும் வகையிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.பி நிஹாரிகா பட் தெரிவித்திருந்தார்.

இதன்படி, அனைத்து வயதினரும், 94875 65699, 94876 06099 என்ற தொலைபேசி எண்களில் 24 மணி நேரமும் தொடர்புகொண்டு உளவியல் ஆலோசனைகளைப் பெறலாம். உளவியல் ஆலோசனை பெறுவோரின் விவரங்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியர்கள் வி.லட்சுமணபதி, கே.சிவகுமார் ஆகியோர் உளவியல் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். எனினும் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை குறையவில்லை.

இதுகுறித்து மண்டலக் காவல் கண்காணிப்பாளர் கே.எல்.வீரவல்லபன் இன்று(ஆக.9) கூறுகையில், "இளம் வயதினர் உள்ளிட்ட பல்வேறு வயதினரும் பல பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொள்கின்றனர். மன ரீதியாகப் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட வெளிச்சம் திட்டம் காரைக்காலில் செயல்பட்டு வருகிறது. தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வோருக்கு உளவியல் ரீதியாகக் கருத்துகளைக் கூறி, தக்க ஆலோசனைகளை வழங்கி ஆற்றுப்படுத்தும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும் தற்கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அதனால் சம்பந்தப்பட்டவர் மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ளோர், அருகில் உள்ளோர், நண்பர்கள் உள்ளிட்ட மற்றவர்களும், இப்படிப்பட்ட மன நிலையில் உள்ளவர்கள் குறித்த விவரங்களைத் தெரிவித்து, உளவியல் வல்லுநர்கள் அவர்களைத் தொடர்புகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளிச்சம் திட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x