Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

பல ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெற்றது புதுச்சேரி அரசு சின்னமான ஆயி மண்டபம்

புதுப்பொலிவு பெற்றுள்ள ஆயி மண்டபம். படம்: செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி

புதுச்சேரி ராஜ்நிவாஸ் - சட்டப்பேரவை எதிரேபராமரிப்பின்றி இருந்த ஆயி மண்ட பம் பல ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக் கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸூக்கும், சட்டப்பேரவைக்கும் எதிரே யுள்ள பாரதி பூங்காவில் அமைந்துள்ளது ஆயி மண்டபம். இம்மண்டபம் தான் புதுச்சேரி அரசு சின்னம். இந்த மண்டபத்தின் பெயருடைய ஆயி என்பவர் தேவதாசி பெண். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

கடந்த 16-ம் நூற்றாண்டில் பேரரசர் கிருஷ்ணதேவராயர் வேலூர் பயணத்தை முடித்துவிட்டு புதுச்சேரி உழவர்கரையிலுள்ள தனது ஆதரவாளர் உய்யகுண்ட விசுவரா யரை பார்க்க வந்தார். அப்போது புதுச் சேரி முத்தரையர்பாளையத்தில் இருந்த மாளிகையை கோயில் என நினைத்து வணங் கினார். ஆனால், அருகில் இருந்தவர்கள் இது தாசியின் வீடு என்றனர். இதையடுத்து அந்த மாளிகையை இடிக்க மன்னர் உத் தரவிட்டார்.

தான் ஆசையாக கட்டிய மாளிகையை தானே இடிப்பதாகவும், அதற்கு கால அவகாசம் வேண்டும் என ஆயி கேட்டார். அதை மன்னர் ஏற்றார். இதையடுத்து தான் ஆசையாக கட்டிய மாளிகையை ஆயி இடித்ததுடன், அந்த இடத்தில் தனது செல்வத்தை கொண்டு மக்களுக்காக குளத்தை உருவாக்கினார். இந்த குளம் புதுச்சேரி மக்களுக்கு முக்கிய நீராதாரமாக அமைந்தது. அதன் பின்னர் 18-ம் நூற்றாண்டில் புதுச்சேரியில் பிரெஞ்சுகாரர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அப்போதைய ஆளுநர் போன்டெம்ப்ஸ், பிரான்சில் ஆட்சி செய்த அரசர் மூன்றாம் நெப்போலியனுக்கு கடிதம் எழுதினார். அதையடுத்து மூன்றாம் நெப்போலியன் உத்தரவின்பேரில் பொறியாளர் லாமை ரெஸ்சே புதுச்சேரி வந்தார்.

16-ம் நூற்றாண்டில் முத்தரையர் பாளையத்தில் ஆயி வெட்டிய குளத்தில் இருந்து நீளமான வாய்க்கால் வெட்டி தற்போதைய பாரதி பூங்கா வரை கால்வாய் அமைத்தார். அதன்மூலம் புதுச்சேரி நகருக்கு தண்ணீர் வந்தது. தண்ணீர் பிரச்சினை தீர்ந்தது தொடர்பாகவும், பொறியாளரை கவுரவிக்க அனுமதி கேட்டும் மூன்றாம் நெப்போலியனுக்கு ஆளுநர் கடிதம் எழுதினார். தாசி குலத்தில் பிறந்து தனது ஆசை மாளிகையை இடித் துவிட்டு மக்களுக்காக குளத்தை வெட்டிய ஆயியின் சிறப்பை அறிந்து வியந்த மூன்றாம் நெப்போலியன் புதிய உத்தரவை பிறப்பித்தார். அதனால் 18-ம் நூற்றாண்டில் உருவானது ஆயி மண்டபம்.

கிரேக்க - ரோமானிய கட்டிடக் கலைஅம்சத்துடன் வெள்ளை நிறத்தில் பார்ப் போரை கவரும் விதத்தில் அமைந்தது ஆயி மண்டபம். பிற்காலத்தில் ஆயி மண்டபத்தை சுற்றி பாரதி பூங்கா அமைந்தது.

புதுச்சேரி அரசின் சின்னமாக இருக்கும் ஆயி மண்டபம் பல ஆண்டுகளாக மோசமான நிலையில் இருந்தது. அதை சுட்டிக்காட்டி 'இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து பராமரிப்பு பணி தொடங்கியது. மண்டபம் நிறம் இழந்து, மேல்சுவர் பூச்சு இன்றி காணப்பட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டது. அப்பணிகள் முடிந்து இறுதிப் பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்தோ - பிரெஞ்சு உறவின் முதன்மை யான அடையாளமாகத் திகழும் ஆயி மண்டபம் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதுப்பொலிவு அடைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x