Last Updated : 08 Aug, 2021 03:18 AM

 

Published : 08 Aug 2021 03:18 AM
Last Updated : 08 Aug 2021 03:18 AM

கரோனாவால் முடங்கிய செட்டிநாடு கைத்தறி சேலைகள்- வெளிநாட்டினரை கவர மெய்நிகர் கண்காட்சி தொடக்கம்

கரோனா பரவலால் முடங்கிய காரைக்குடி செட்டிநாடு கைத்தறி சேலைகள், கண்டாங்கி சேலைகள் உள்ளிட்ட கைத்தறி ஆடைகளின் விற்பனையை அதிகரிக்கவும், வெளிநாட்டினரைக் கவரவும் முதன்முறையாக ஆன்லைனில் மெய்நிகர் (விர்சுவல்) கண்காட்சி தொடங்கியது.

காரைக்குடி, கானாடுகாத்தா னில் செட்டிநாடு கைத்தறி மற்றும் கண்டாங்கி சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. பிரபலமான கண்டாங்கி சேலைக்கு 2019-ல் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது. இச்சேலைகளை உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் வாங்கிச் சென்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் வரவில்லை. இதனால் சேலைகள் விற்பனை சரிந்தது. தற்போது தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படும் வேளையில், மத்திய அரசின் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மூலம் செட்டிநாடு கைத்தறி சேலைகள், கண்டாங்கி சேலைகள் உள்ளிட்ட கைத்தறி ஆடைகளின் விற்பனையை அதிகரிக்கவும், வெளிநாட்டினரை கவரவும் முதன்முறையாக ஆன்லைனில் மெய்நிகர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இக்கண்காட்சி ஆக. 11 வரை நடக்கிறது. இதில் கைத்தறி ஆடைகளை நேரில் சென்று பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இலங்கை, வங்கதேசம், மியான்மர், பூடான், மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து கானாடுகாத்தான் நெசவாளர் வி.வெங்கட்ராமன் கூறியதாவது: இக்கண்காட்சி மூலம், வியாபாரிகள் தங்களுக்குப் பிடித்த ஆடைகளுக்கு உடனடியாக ஆர்டர் வழங்குவர். இதன்மூலம், முடங்கிய கைத்தறி ஆடை விற்பனையை மீட்க முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x