Published : 16 Feb 2016 04:04 PM
Last Updated : 16 Feb 2016 04:04 PM

வெள்ள மீட்புப் பணி: 2,278 மீனவர்களுக்கு தமிழக அரசு பாராட்டு

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது 2,278 மீனவர்கள் முனைப்புடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதைப் பாராட்டுவதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-2017 ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

ஓ.பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறும்போது, ''அண்மையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது 691 மீன்பிடிப் படகுகளுடன், 2,278 மீனவர்கள் முனைப்புடன் மீட்பு நடவடிக்கைகளில் திறம்பட ஈடுபட்டு, அவர்கள் ஆற்றிய அரும் பணியை முதற்கண் மனதாரப் பாராட்ட நான் விழைகிறேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களின் நலனிலும், குறிப்பாக, பாக் நீரிணைப்பில் உள்ள பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடித்து வரும் மீனவர்களின் நலனிலும் அவர்களின் பாதுகாப்பிலும், முதல்வர் ஜெயலலிதா பெரும் கவனம் செலுத்தி வருகிறார்.

முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிகளின் காரணமாக, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 357 மீன்பிடி படகுகளுடன் 2,271 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கச்சத்தீவை மீட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டுவதே, இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்ற இந்த அரசின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் இங்கு வலியுறுத்துகிறேன்'' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x