Published : 07 Aug 2021 05:14 PM
Last Updated : 07 Aug 2021 05:14 PM

கரோனாவால் குணமடைந்த சுமார் 1 லட்சம் பேருக்கு தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனை

ரிங்கு மெச்சேரியை பாராட்டிய ககன்தீப் சிங் பேடி.

சென்னை

கோவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய சுமார் 1 லட்சம் நபர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஆக. 07) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக முதல்வரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு 12.06.21 அன்று கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்து சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியவர்களை கண்காணிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தொலைபேசி ஆலோசனை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்படி, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்க மருத்துவர்கள் மற்றும் சென்னை தன்னார்வலர்கள் (Chennai Volunteers) என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுமார் 150 பயிற்சி பெற்ற தொலைபேசி அழைப்பாளர்கள் கொண்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்தப் பயிற்சி அளிக்கப்பட்ட தொலைபேசி அழைப்பாளர்கள் மூலம் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய நபர்களை தொடர்பு கொண்டு தலைவலி, உடல் வலி, உடல் சோர்வு, தூக்கமின்மை, இருமல், சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு, அறிகுறிகள் இருந்த நபர்களுக்கு தொடர்பு மைய தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வந்தது.

மேலும், உளவியல் ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு தொலைபேசி வழியாக மனநல மருத்துவர்களின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. உணவு தொடர்பாக சந்தேகங்களுக்கு உணவியல் நிபுணர்கள் மூலம் ஆரோக்கியம் மற்றும் சத்தான உணவுகள் குறித்த ஐயங்களும் தீர்த்து வைக்கப்பட்டது.

கோவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியவர்களுக்கான தொலைபேசி மூலம் கண்காணிக்கும் திட்டத்தின் மூலம் இதுவரை 1,29,712 நபர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதில், ஒருசில நோய் அறிகுறிகளுடன் இருந்த 5,874 நபர்களுக்கு VidMed செயலி மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றில் வீடியோ அழைப்பின் மூலம் மருத்துவர்களால் மருத்துவ ஆலோசனை இலவசமாக அளிக்கப்பட்டது.

மேல்சிகிச்சை தேவைப்பட்ட நபர்கள் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதில், குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் காசநோய் உள்ள நபர்களின் இருப்பிடத்திற்கு மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளனர்.

அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி. கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியவர்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட தொலைபேசி ஆலோசனை மையத்தில் பணிபுரிய 150 பயிற்சி பெற்ற தொலைபேசி அழைப்பாளர்களை வழங்கிய சென்னை தன்னார்வலர்கள் (Chennai Volunteers) தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ரிங்கு மெச்சேரியை பாராட்டி இன்று ரிப்பன் கட்டடத்தில் சான்றிதழை வழங்கினார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x