Published : 07 Aug 2021 03:18 AM
Last Updated : 07 Aug 2021 03:18 AM

பராமரிப்புப் பணி காரணமாக அரக்கோணம் தடத்தில் மின்சார ரயில்கள் சேவையில் மாற்றம்

அரக்கோணம் தடத்தில் நாளைபராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்சார ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பயணிகள் பாதுகாப்பு மற்றும் சீரான ரயில் இயக்கத்தை கருத்தில்கொண்டு, தண்டவாள பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் தடத்தில் வில்லிவாக்கம்-வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் இடையே நாளை (ஆக. 8) காலை 10.45 மணி முதல் மதியம் 12.45 மணி வரை தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யபட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மதியம் 1.55, திருவள்ளூர்-சென்னை சென்ட்ரல் காலை 11.50 ரயில்களின் சென்னை சென்ட்ரல்-ஆவடி இடையேயான சேவை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் காலை 11.25, 11.45, 12.55, 1.30 மணி மற்றும் ஆவடிக்கு மதியம் 12.20 மணிக்குச் செல்லும் மின்சார ரயில்கள், அதே நேரத்தில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் காலை 10.30 மணி, 11.15 மணி, ஆவடி-சென்னை சென்ட்ரல் காலை 11 மணி ரயில்கள் பட்டாபிராம், இந்து கல்லூரி, அன்னனூர், திருமுல்லைவாயல், அம்பத்தூர், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x