

இந்தியாவில் பல மாநிலங்கள் நக்சலைட் பிடியில் சிக்கியுள்ள நிலையில், தமிழகத்தில் நக்சலைட் ஊடுருவல் இல்லை என்பது பெருமை அளிக்கிறது என முன்னாள் டிஜிபி தேவாரம் தெரி வித்தார்.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி போன்ற மாவட் டங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் நக்சலைட் பிடியில் சிக்கி யிருந்தது. கடந்த 1978-ம் ஆண்டு திருப்பத்தூரைச் சேர்ந்த அப்பாசாமி ரெட்டியார், பொன்னேரியைச் சேர்ந்த கேசவன், கதிரம்பட்டியைச் சேர்ந்த நடேசன் ஆகியோர் நக்சலைட் தாக்குதலுக்கு உயிரிழந்தனர். நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த தமிழ்வாணன் தலைமை யில் சிவலிங்கம், மகாலிங்கம், நொண்டி பழனி உள்ளிட்ட பலர் திருப்பத்தூரில் பதுங்கியிருந்து 3 மாவட்டங்களை தங்கள் கட்டுப் பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.
இந்நிலையில், 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலை கிராமத்தில் சுற்றித்திரிந்த 4 பேரை ஜோலார்பேட்டை காவல் ஆய் வாளராக அப்போது பணியாற்றி வந்த பழனிசாமி பிடித்தார்.
இதைத்தொடர்ந்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசா ரணையில் பிடிபட்டவர்களில் ஒருவர் நக்சலைட் அமைப்பை சேர்ந்த முக்கிய புள்ளி சிவலிங்கம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கைது செய்யப் பட்ட நக்சலைட்களை காவல் துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நீதிமன்றத்துக்கு செல்லும்போது வெடிகுண்டு வீசப்பட்டு காவல் ஆய்வாளர் பழனிசாமி, காவலர்கள் முருகேசன், ஏசுதாஸ் மற்றும் ஆதிகேசவலு ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர். நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த சிவலிங்கம் மட்டும் தப்பி யோடினார்.
நக்சலைட் தாக்குதலில் உயிர் நீத்த காவலர்களுக்கு கடந்த 1980-ம் ஆண்டு திருப்பத்தூர் நகரில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் பங்கேற்று, இறுதி ஊர்வலத்துடன் நடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, ஆண்டு தோறும் ஆகஸ்ட் 6-ம் தேதி உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு திருப்பத்தூர் நகர காவல் நிலை யத்தில் ‘வீர வணக்கம்’ அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது.
அதன்படி, 41-வது வீர வணக்கம் நினைவஞ்சலி நிகழ்ச்சி திருப்பத்தூர் நகர காவல் நிலை யத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து, ஐஜி சந்தோஷ்குமார், டிஐஜி பாபு, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, எஸ்.பி., சிபி சக்கர வர்த்தி ஆகியோர் உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு 30 குண்டுகள் முழங்க காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஓய்வுபெற்ற தமிழக டிஜிபி வால்டர் தேவாரம் உடல் நலக் குறைவால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை, இருப்பினும், காணொலி காட்சி மூலம் அவர் நேற்று பேசும்போது, "முதலாம் உலகப்போர், 2-ம் உலகப்போர் களில் கூட உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தற்போது வரை நடத்தப் படுவதில்லை. ஆனால், திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டுமே நக்சலைட் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த 4 காவலர்களுக்கு தொடர்ந்து 41 ஆண்டுகளாக வீர வணக்கம் அஞ்சலி செலுத்தி வருவது காவல் துறைக்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போதும் நக்சலைட் ஊடுருவல் காணப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் நக்சலைட் ஊடுருவல் இல்லை என்பது மகிழ்ச்சியளிக் கிறது. தமிழகம் எப்போதும் அமைதி பூங்காவாக இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், க்யூ பிரிவு எஸ்.பி., கண்ணம்மாள், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), தேவராஜ் (ஜோலார் பேட்டை), திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம், எஸ்.பி., தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பழனி, நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி, பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.