Published : 06 Aug 2021 03:22 PM
Last Updated : 06 Aug 2021 03:22 PM

தூத்துக்குடியில் அதிக ஆழம் கொண்ட வெளித்துறைமுகம்; பணிகள் இன்னும் தொடங்கவில்லை: டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

தூத்துக்குடியில் ஆழ்கடல் வெளித்துறைமுகம் திட்டப் பணிகள் தொடங்கி விட்டனவா என, மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்..

திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று (ஆக. 05) மக்களவையில், "தற்போது தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருக்கும் கப்பல் மிதவை ஆழம் குறைவாக உள்ளதால், மிகப்பெரிய கப்பல்கள் வந்து செல்வதில் சிக்கல் இருக்கிறது. எனவே, இந்த பிரச்சினையைக் கருத்தில் கொண்டு வெளித்துறைமுகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதா? அப்படியானால், திட்டப் பணிகள் தொடங்கிவிட்டனவா? இதுவரை வெளித்துறைமுகத் திட்டப் பணிகளுக்கு அரசு செலவிட்ட தொகை எவ்வளவு?" என, மத்திய கப்பல் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவாலிடம் கேள்வி எழுப்பினார்.

மத்திய கப்பல் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால்: கோப்புப்படம்

இதற்கு மத்திய கப்பல் துறை அமைச்சர் அளித்த பதில்:

"தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் அதிக ஆழம் கொண்ட வெளித்துறைமுகம் (அவுட்டர் ஹார்பர்) அமைத்திட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. ஆனால், திட்டப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை தூத்துக்குடி வெளித்துறைமுகத் திட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை வ.உ.சி. துறைமுக நிர்வாகம் தயாரித்துள்ளது. அதற்காக 5.87 கோடி ரூபாயை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் செலவு செய்துள்ளது.

ஆனால், திட்டப் பணிகள் இன்னும் தொடங்கப்படாததால் வெளித்துறைமுகம் அமைப்புப் பணிகளுக்காக செலவு ஏதும் இதுவரை செய்யப்படவில்லை".

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x