Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரில் விடுபட்ட ஆவணங்களை திரட்டி வருகிறோம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகாரில் விடுபட்ட ஆவணங்களை திரட்டி வருகிறோம் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2011 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர், கடந்த 2013-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, இதுதொடர்பான புகாரில்வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்பதால், விசாரணை முடித்து வைக்கப்பட்டது என லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில்அறிக்கை தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தனர். அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி எம்.சத்தியநாராயணனும், நீண்ட இடைவெளிக்கு பிறகுவழக்கு பதிவு செய்து விசாரிப்பதால் எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை எனக்கூறி மகேந்திரனின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஆர்.ஹேமலதாவும் தீர்ப்பளித்தனர்.

இதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எம்.அஜ்மல்கான், ‘‘இரு நீதிபதிகள் அளித்த மாறுபட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’’ என கோரினார்.

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ‘‘முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகாரில்விடுபட்ட ஆவணங்களை திரட்டிவருகிறோம். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.வழக்கை தொடர்ந்து நடத்த தயாராக இருக்கிறோம்’’ என தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனக் கூறி விசாரணையை ஆக.19-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்று கூறிவிசாரணையை நீதிபதி ஆக.19-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x