Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM
பள்ளி, கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு சாதி, வருமானச் சான்றுகளை பள்ளிகள் மூலமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதுஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறைஅமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் பட்டாவழங்குவதில் நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. அதை ஒழுங்குபடுத்த வேண்டும். விரைவாக பட்டாவழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.
அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆற்றின் கரையோரம் வசிப்போருக்கு உரிய இடவசதி செய்து கொடுத்த பின்னர்தான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அவர்களுக்கு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்தால், பாதிக்கப்படுவோர் உடனே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கின்றனர். இதுபோன்ற சிக்கல்களை தடுக்க ஆக்கிரமிப்பை அகற்றிய அடுத்த நாளே,நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இவர்களுக்கு தேவையான சாதி, வருவாய்சான்றுகளை விண்ணப்பித்த ஒருசில நாட்களில் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் தர வாய்ப்புஉள்ளதா எனவும் ஆராயுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சென்னை ஆட்சியர் விஜயராணி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT