Published : 06 Aug 2021 03:21 AM
Last Updated : 06 Aug 2021 03:21 AM
கேரள-குமரி எல்லையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் கரோனா பரிசோதனை இல்லாமல் வந்தவர்கள் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்திருந்த வேளையில் மீண்டும் தொற்று சற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், குமரி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் தினமும் 22 ஆயிரம் பேருக்கு மேல் கரோனா தொற்றால் பாதி்த்து வருவதால், தமிழகத்தில் கேரள எல்லைப்பகுதியில் தடுப்பு நடவடிக்கை மற்றும் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. நேற்றில் இருந்து இந்த கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை, காக்காவிளை, நெட்டா சோதனைச்சாவடிகள் மற்றும் கேரளாவில் இருந்து வரும் குறுக்கு சாலைகளில் நேற்று அதிகாலையில் இருந்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. போலீஸார் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கேரளாவில் இருந்து கார், மற்றும் பிற வாகனங்களில் வருவோர் இ-பாஸ் வைத்திருந்தால் மட்டுமே குமரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதைப்போல், 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். கரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் இருப்பவர்களை மட்டுமே அனுமதித்தனர். அவ்வாறு இரு சான்றிதழ் இல்லையென்றால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும், சான்றிதழ் இல்லாமல் இறப்பு மற்றும் பிற அவசர நிகழ்வுக்காக வருவோருக்கு களியக்காவிளை சோதனைச்சாவடியிலேயே ஆர்.டி.பி.சிஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டு குமரி எல்லைக்குள் அனுமதிக்கின்றனர்.
நேற்று மட்டும் சான்றிதழ் இல்லாமல் வந்த 300-க்கும் மேற்பட்டோர் கேரளாவுக்கே திரும்ப அனுப்பப்பட்டனர். இதைப்போல் கேரளாவில் இருந்து ரயிலில் வரும் பயணிகளிடம் நாகர்கோவில், கன்னியாகுமரி, குழித்துறை, இரணியல் ரயில் நிலையங்களில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. குமரி, கேரள எல்லையில் அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என சுகாதாரத்துறையின் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT