ராஜீவ் கொலைக் கைதி ரவிச்சந்திரன் பரோல் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் கொலைக் கைதி ரவிச்சந்திரன் பரோல் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்கக் கோரி தாக்கலான மனு தொடர்பாகத் தமிழக அரசிடம் தகவல் பெற்றுத் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

ரவிச்சந்திரனை பரோலில் விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ரவிச்சந்திரனை 2 மாதம் பரோலில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில், மனுதாரர் பரோல் வழங்குவதை சட்டபூர்வ உரிமையாகக் கேட்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷா பானு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமுருகன் வாதிட்டார். பின்னர், ராஜேஸ்வரி மனு தொடர்பாகத் தமிழக அரசிடம் தகவல் கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in