Last Updated : 05 Aug, 2021 02:38 PM

 

Published : 05 Aug 2021 02:38 PM
Last Updated : 05 Aug 2021 02:38 PM

விடுபட்டுள்ளவர்களுக்கும் பழங்குடியினர் சான்றிதழ் வேண்டும்: புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

விடுபட்டவர்களுக்கும் பழங்குடியினர் சான்றிதழ் கிடைக்கச் செய்ய வேண்டுமென புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஆக. 5)வெளியிட்டுள்ள அறிக்கையில்: ‘‘புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இன பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் இருளர் மற்றும் அதன் உட்பிரிவுகளான வில்லி, வேட்டைக்காரர், மலைக்குறவன், மலகுறவன், காட்டு நாயக்கன், எர்குலா, குருமன், குருமன்ஸ் ஆகிய இனத்தைச் சேர்ந்வர்கள் மட்டுமே புதுச்சேரி அரசின் சாதிப்பட்டியலில் வருகின்றனர்.

முதலில் இவர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலிலேயே இடம் பெற்று இருந்தனர். நீண்டகால போராட்டத்துக்குப் பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு இருளர் மற்றும் அதன் உட்பிரிவுகளான வில்லி, வேட்டைக்காரர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, ஒரு சதவீத இட ஒதுக்கீடும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

மீதியுள்ள மலைக்குறவன், மலகுறவன், காட்டுநாயக்கன், எர்குலா, குருமன், குருமன்ஸ் ஆகிய இனத்தைச் சேர்ந்வர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படாததால் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தொடர்ந்து மேல் படிப்புகளை படிக்க முடியாமலும், அரசின் வேலை வாய்ப்புகளை பெற முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதேசமயம் அரசு தற்போது வனவிலங்குகள் மற்றும் பறவைகள் வேட்டையாடுவதை முற்றிலும் தடை செய்துவிட்டது. இதை மீறி செயல்படுபவர்களை கைது செய்து, சிறையில் அடைத்து வருகின்றது. இதனால் எப்படியும் சிறைக்குத்தானே செல்லப்போகின்றோம் என்று அச்சமுதாயத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் வேறு சில சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தடுக்க அரசு உடனடியாக மலைக்குறவன், மலகுறவன், காட்டுநாயக்கன், எர்குலா, குருமன், குருமன்ஸ் இனத்தைச் சேர்ந்தவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசின் மூலமாக விரைந்து எடுத்து, இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். அதுபோல் குருவிக்காரன், முறங்கட்டிக் குறவர் மற்றும் மருத்துவம் பார்க்கும் குறவர் போன்ற பிரிவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் புதுச்சேரியில் வசித்து வருகின்றனர். இவர்களும் விளிம்பு நிலையில்தான் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த இளம் சமுதாயத்தினரும் சாதிச்சான்றிதழ் கிடைக்காததால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெறமுடியாமல் உள்ளனர். எனவே அவர்களுக்கும் புதுச்சேரி அரசால் சாதிச்சான்றிதழ் வழங்கப்படுவதுடன், அவர்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்த்து, அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று முதல்வரை, புதுச்சேரி திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.’’இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x