Published : 05 Aug 2021 02:06 PM
Last Updated : 05 Aug 2021 02:06 PM

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்குப் பின் ஓஎன்ஜிசி 6 எரிவாயு கிணறுகளைத் தோண்டியது: வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

காவிரிப் படுகை வேளாண் மண்டலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட பிறகு, ஓஎன்ஜிசி 6 கிணறுகளைத் தோண்டியது என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரியிடம் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விகள்:

"1. காவிரிப் படுகை வேளாண் மண்டலம் பாதுகாக்கப்பட்ட பகுதி என, தமிழக அரசு அறிவிப்பதற்கு முன்பு, அங்கே எத்தனை ஹைட்ரோகார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டுவதற்கு, மத்திய அரசு உரிமம் அளித்தது?

2. அவ்வாறு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகளில், புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மண்டலங்களில், எத்தனை எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டன?

3. அண்மையில் ஏதேனும் ஒப்பந்தப் புள்ளி கோரும் பணிகள் தொடங்கி உள்ளனவா?

4. மேலும், புதிய எரிவாயு கிணறுகள் தோண்டுவதற்கான, திட்ட வரைவுகள் ஏதும் அரசிடம் வழங்கப்பட்டுள்ளதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக".

ஆகிய கேள்விகளை வைகோ எழுப்பியிருந்தார்.

வைகோ எழுப்பிய கேள்விகளுக்கான விளக்கம், ஒரு அறிக்கையாக, நேற்று (ஆக. 04) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி: கோப்புப்படம்

அதன்படி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அளித்த விளக்கம்:

"1. காவிரிப் படுகை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, தமிழக அரசால் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, 636 எரிவாயு கிணறுகள் தோண்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அவற்றுள், 631 கிணறுகளை, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் தோண்டியது; மற்ற ஐந்து கிணறுகளை வேறு சிலர் தோண்டி வந்தனர்.

அவற்றுள் 329 கிணறு தோண்டும் பணிகள் கைவிடப்பட்டன. அவற்றுள் 324 ஓஎன்ஜிசி மற்றவர்கள் 5. எஞ்சிய 307 கிணறுகள், பயன்பாட்டில் உள்ளன; அவற்றுள், 178 கிணறுகளில், இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எஞ்சிய 129 கிணறுகளில், பராமரிப்புப் பணிகள், தொழில்நுட்பப் பழுதுபார்ப்புகள், பாதுகாப்பு, உகந்த நிலை இன்மை மற்றும் கருவிகளில் கோளாறுகள் காரணமாக மூடப்பட்டுள்ளன.

2. காவிரிப் படுகை வேளாண் மண்டலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட பிறகு, ஓஎன்ஜிசி 6 கிணறுகளைத் தோண்டியது. அவற்றுள் ஒன்று கைவிடப்பட்டது; மற்ற ஐந்து கிணறுகளில் எரிவாயு எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தின்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள கிணறுகளுக்குத் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. அந்த அறிவிப்புக்குப் பிறகு, புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் கிணறு தோண்டும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.

கேள்விகள் 3,4-க்கு விளக்கம்:

2021 ஜூன் 10 ஆம் நாள், இந்திய அரசு, இந்தியா முழுமையும், 13,204 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் ஹைட்ரோகார்பன் எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்ட 75 இடங்களில் (Discovered Small Field Bid-Round III), மூன்றாவது சுற்றில், 32 இடங்களில் குத்தகை ஒப்பந்தம் வழங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றது.

அவற்றுள் ஒரு ஒப்பந்தம், தமிழகத்தில், 463.3 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு குறித்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வடதெரு, 2007ஆம் ஆண்டு உரிமம் வழங்கப்பட்டு, தற்போது மூடி வைக்கப்பட்டுள்ள 2 நிலத்தடி பெட்ரோலியக் கிணறுகள், 2012ஆம் ஆண்டு ராமநாதபுரம் கடலில் பெட்ரோலியம் எடுக்கும் ஒரு கிணறு.

கேள்வி 5-க்கு விளக்கம்

தற்போது பணிகள் நடைபெற்று வருகின்ற கீழ்க்காணும் திட்டங்களுக்கு, உரிமம் கேட்டு விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

1. தேசிய ஆய்வு உரிமக் கொள்கையின்படி (National Exploration Licensing Policy) வழங்கப்பட்ட இரண்டு தொகுப்பு பெட்ரோலிய சுரங்கக் குத்தகைப் (CY-ONN and CY-ONN-2004-2) பணிகளில், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அரசு ஏற்பு கேட்டுள்ளனர். அந்த விண்ணப்பத்தை, ஒன்றிய அரசு, தமிழ்நாடு மாநில அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

2. அதேபோன்ற இரண்டு தொகுப்புகள், (CY-ONDSF-Neduvasal-2016; (CY-ONDSF-Karaikal-2016) (Discovered Small Field Bid-Round I) 2017ஆம் ஆண்டு உரிமம் வழங்கப்பட்டன. அங்கும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, அரசு ஏற்பு கேட்டுள்ளனர். அந்த விண்ணப்பத்தை, மத்திய அரசு, தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது".

இவ்வாறு அமைச்சர் ஹர்தீப்சிங் புரி விளக்கம் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x