

தமிழகம் முழுவதும் 1,120 போலீஸாரை இடமாற்றம் செய்து டிஜிபிசைலேந்திரபாபு உத்தரவிட் டுள்ளார்.
தமிழக காவல் துறையில் 1 லட்சத்து 11,897 பேர் பணியில் உள்ளனர். இதில் தலைமைக் காவலர்கள், 2-ம் மற்றும் முதல் நிலை காவலர்கள் மட்டும் 86,757 பேர் உள்ளனர். சிறப்பு காவல் படை பிரிவில் 13,526 பேர் உள்ளனர். உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கும் மேல் பதவியில் உள்ளவர்களைத் தவிர்த்து, தலைமைக் காவலர்கள், இரண்டு மற்றும் முதல் நிலைக் காவலர்கள், சிறப்பு காவல் படை பிரிவினர்கள் என 1 லட்சத்து 283 பேர் தமிழக காவல் பணியில் உள்ளனர்.
இவர்களில் ஏராளமானவர்கள் தங்களது சொந்த மாவட்டத்தை விட்டு பிரிந்து, வெளி மாவட்டங்களிலேயே பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த பின்னர் மீண்டும் சொந்த மாவட்டத்திலேயே பணி புரிய அனுமதிக்கப்படுவர்.
பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணையை பிரிந்து வேறு இடங்களில் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் விருப்பத்தின்பேரில் இடமாற்றம் வழங்கப்படும். இதற்குகாவலர்கள் தங்களது சுய விருப்பத்தின்பேரில் இடமாற்றம் கேட்டு,காவல் துறை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 1,120 காவலர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
காவலர்களின் பணியிட மாற்ற உத்தரவை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்டார்.
பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணையை பிரிந்து வேறு இடங்களில் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் விருப்பத்தின் பேரில் இடமாற்றம் வழங்கப்படும்.