Published : 04 Aug 2021 05:29 PM
Last Updated : 04 Aug 2021 05:29 PM

கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களைத் தாக்கல் செய்க: இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவற்றின் வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களை விரிவான அறிக்கையாக 4 வாரங்களில் தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களைத் தனி நபர்களுக்கு அரசு வழங்கியுள்ளது எனவும், பால் கொடுப்பதை நிறுத்திய இந்தப் பசுக்கள் அடிமாடுகளாக 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக அளித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தனி நபர்களுக்குப் பசுக்களை வழங்க வகைசெய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட கால்நடைகளைப் பாதுகாக்க உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும், 2000-ம் ஆண்டு முதல் 2021 வரை கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்கள், காளைகள், கன்றுகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

கோயில்களில் கால்நடைகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா எனக் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும் எனவும், கோசாலைகளுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களைத் தனி நபர்களுக்கு இலவசமாக வழங்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோயில்களின் சொத்துகள் அரசின் சொத்துகள் அல்ல எனவும், கோயில் சொத்துகளை மதம் சார்ந்த விவகாரங்களைத் தவிர பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை இன்று (ஆக. 04) விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனவும், தானம் வழங்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி, மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவற்றின் வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களை விரிவான அறிக்கையாக, 4 வாரங்களில் தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஐந்து வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x