Last Updated : 04 Aug, 2021 04:41 PM

 

Published : 04 Aug 2021 04:41 PM
Last Updated : 04 Aug 2021 04:41 PM

ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக மதுரை - ராமேசுவரத்துக்கு ஓடாத பயணிகள் ரயில்

மதுரை

தமிழகத்தில் கரோனா பரவலைத் தொடர்ந்து 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு, ரயில், விமானம், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டது. தளர்வுகளுடன் பொதுப் போக்குவரத்து தொடங்கினாலும், ரயில் போக்குவரத்தைப் பொறுத்தவரை சிறப்பு ரயில்கள் என்ற நிலையிலேயே தற்போது வரை இயக்கப்படுகின்றன.

கரோனா 2-வது அலையைக் கடந்தாலும், பெரும்பாலான ரயில் வழித்தடங்களில் பயணிகள், சிறப்பு ரயில்கள் ஓடவில்லை என, பயணிகள் புகார் கூறுகின்றனர். அந்த வரிசையில் முக்கிய புண்ணிய ஸ்தலமான ராமேசுவரம், மதுரையை இணைக்கும் வகையில் ஓடிய பயணிகள் ரயில்கள் இதுவரை ஓடவில்லை.

தினமும் மதுரை - ராமேசுவரம் காலை 6.30, மதியம் 12.40, மாலை 6.10 மற்றும் ராமேசுவரம்- மதுரை காலை 5.40, நண்பகல் 11.50, மாலை 6 மணி என்ற அட்டவணைப்படி இயக்கப்பட்ட இந்த ரயில்களால் கல்வி, மருத்துவம், வர்த்தகம், வேலைவாய்ப்பை நோக்கி பயணிப்போருக்கு மிக வசதியாக இருந்தது.

கரோனா முதல் அலையின்போது நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்கள் இதுவரை ஓடாததால் குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். மீண்டும் இவ்வழித்தடத்தில் சாதாரணக் கட்டணத்தில் பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்துப் பயணிகள் கூறுகையில், "மதுரை- ராமேசுவரம் வழித்தடத்தில் ஓடிய பயணிகள் ரயில்கள் மூலம் ஏழை, நடுத்தர மக்கள் பயன் அடைந்தனர். குறிப்பாக மதுரைக்குக் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் தினசரி வேலை, மருத்துவம், தொழில் சார்ந்த பணிகளுக்குச் செல்வோருக்குப் பயனுள்ளதாக இருந்தது. கரோனாவைக் காரணம் காட்டி ஓராண்டுக்கு மேல பயணிகள் ரயில்களை இயக்காததால் கூடுதல் கட்டணம் கொடுத்து பேருந்துகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

மாட்டுத்தாவணியில் இருந்து பரமக்குடி மற்றும் பரமக்குடி வழியாக ராமேசுவரம், ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, முதுகுளத்தூர், சாயல் குடிக்கு ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு 2 மணி நேர இடைவெளியில் பயணிகள் ரயில்களை இயக்கினால் மக்களும் பயன்பெறுவர். ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாய் அதிகரிக்கும். மதுரை- பரமக்குடி வரை மின்வழித்தடம் தயாரான நிலையில், மதுரை- பரமக்குடி வரையிலாவது பயணிகள் ரயில்களை இயக்கலாம். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

ராமநாதபும் எம்.பி. நவாஸ்கனி கூறுகையில், ‘‘பொதுமக்கள், மாணவர்கள், பக்தர்கள் நலன் கருதி மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயிலை பாதுகாப்பு விதிமுறையைப் பின்பற்றி இயக்க ஏற்கெனவே இது தொடர்பாக டெல்லியில் ரயில்வே அமைச்சகத்தில் கடிதம் கொடுத்துள்ளேன். இது தொடர்பாகத் தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அளிக்கப்படும். முடியாத நிலையில், பரமக்குடி வரை மின்வழித் தடத்தைப் பயன்படுத்தி சிறப்பு ரயில் என்ற வகையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ரயில்வே நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, ‘‘கரோனா ஊரடங்கிற்குப் பின், பெரும்பாலும் பயணிகள் ரயில்களை இயக்கவில்லை. எக்ஸ்பிரஸ் ரயில்களும் சிறப்பு ரயில் என்ற நிலையில் ஓடுகின்றன. ராமேசுவரம்-மதுரை வழித்தடத்தில் பயணிகள் ரயில்களை இயக்கும் சூழல் இன்றி, சிறப்பு ரயிலை இயக்கலாம் என்றால் குறைந்தது 200 கி.மீ. தூரம் தேவை என்றபோதிலும் மதுரை- ராமேசுவரம் சுமார் 165 கி.மீ. தொலைவில் உள்ளது. 200 கி.மீ. என்ற அடிப்படையில் இயக்கலாம் எனில் பழனி- ராமேசுவரம் ஆகிய இரு வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயிலை இயக்கலாம். ஆனாலும், பயணிகள் வருகை போன்ற சில நடைமுறையை ஆய்வு செய்து அனுமதி பெறவேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x