Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM
மதுப் பழக்கத்தின் தீமைகளை விளக்கி லாரி ஓட்டுநர்கள், ஊழியர்கள் மத்தியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சென்னையில் இந்தியன் ஆயில்நிறுவனம் சார்பில் நடத்தப்படும் ‘சுபாரதி’ எனப்படும் பரப்புரையின் ஒரு பகுதியாக, மதுப் பழக்கம் குறித்த தீமையை விளக்கி எண்ணெய் சுத்திகரிப்பு முனையங்களின் ஒப்பந்த தொழிலாளர்கள், ஊழியர்கள், டேங்கர் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் மத்தியில் விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மதுப் பழக்கத்தின் தீமைகளை விளக்கும் இந்த நாடக நிகழ்ச்சியை, சென்னை ஆல்ட்டர்நேட் மீடியாசென்டர் குழுவினர் நடத்தினர்.
மதுப் பழக்கத்துக்கு அடிமையானால் ஏற்படும் தீமைகள், குடும்பத்தினருக்கு ஏற்படும் சமூகப்பொருளாதார பாதிப்புகள் குறித்து நாடகம் மூலம் விளக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை, இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தண்டையார்பேட்டை முனையத்தில் தொடங்கி வைத்த பொதுமேலாளர் விஜயகுமார் பின்னர் கூறும்போது, ‘‘ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி விடாமல் ஆரோக்கியமான நல்வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.
பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டும் வழிமுறை, சாலைபாதுகாப்பு விதிகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் வீதி நாடக நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை மேலாளர் கவிதா ரவிக்குமார் தலைமையில், தொழிலாளர்கள் மதுப் பழக்கம் ஒழிப்புக்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT