Published : 04 Aug 2021 03:20 AM
Last Updated : 04 Aug 2021 03:20 AM

திருத்தணி நிதி நிறுவன அதிபர், மனைவி ஆந்திராவில் கொலை: தங்கை மகன் உள்ளிட்ட 3 பேர் கைது

திருத்தணி

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, மாருதி தெருவைச் சேர்ந்தவர் சஞ்சீவி(70). இவர், விவசாயம் செய்து வருவதோடு, நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த மாதம் 29-ம் தேதி சஞ்சீவியும், அவரது மனைவி மாலா(60) இருவரும் வீட்டிலிருந்து, ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.

இதனால், திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் பகுதியில் வசிக்கும் சஞ்சீவியின் தம்பி பாலு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருத்தணி போலீஸார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.அவ்விசாரணையில் தெரியவந்ததாவது:

சஞ்சீவியின் தங்கை மகனான, திருத்தணி, கே.கே.நகரை சேர்ந்த ரஞ்சித்குமார்(27), திருத்தணியில் தாம் நடத்தும் 3 பேக்கரி, தேநீர் கடைகளின் விரிவாக்கத்துக்காக சஞ்சீவியின் மருமகன் பழனியிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி அதில் ரூ.50 லட்சத்தை திரும்ப செலுத்தியுள்ளார். மீதமுள்ள தொகையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் திரும்ப கொடுக்க கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

வியாபார ரீதியாக பலரிடம் லட்சக்கணக்கில் வாங்கிய கடனை திருப்ப செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார் ரஞ்சித்குமார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, சஞ்சீவி தன்னையும், தன்மனைவியையும் ஆந்திர மாநிலத்தில் உள்ள அப்பலகுண்டா கோயிலுக்கு அழைத்து செல்லுமாறு, ரஞ்சித்குமாரிடம் கூறியுள்ளார்.

இதை பயன்படுத்திக் கொள்ளநினைத்த ரஞ்சித்குமார், சஞ்சீவியையும், அவரது மனைவியையும் கொலை செய்து, அவர்களின் நகைகள்மற்றும் பணத்தை அபகரிக்க சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, கடந்த மாதம் 29-ம் தேதிசஞ்சீவியையும், அவரது மனைவிமாலாவையும் அப்பலகுண்டா கோயிலுக்கு காரில் அழைத்து செல்லும் வழியில், தனது நண்பர்களான விமல்ராஜ்(27), ராபர்ட் என்கிற ரஞ்சித்குமார்(24) ஆகியோரை காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது, ஆந்திர மாநிலம், புத்தூர்அருகே காரை நிறுத்தி, சஞ்சீவி, மாலா ஆகியோரை நண்பர்களுடன் சேர்ந்து இரும்பு ஒயரால் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடல்களை சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள சித்திரகாலிப்பள்ளி பகுதியில் மறைவாக உள்ள புதரில் வீசியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, திருத்தணி போலீஸார், ஆந்திர போலீஸாரின் உதவியுடன் சித்திரகாலிப்பள்ளி பகுதியில் வீசப்பட்ட சஞ்சீவி, மாலா உடல்களை கைப்பற்றினர்.

தொடர்ந்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி, ரஞ்சித்குமார், விமல்ராஜ், ராபர்ட் ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த சஞ்சீவி, மாலா ஆகியோரின் 46 பவுன் நகைகள், ரூ.8 லட்சம் பணம் மற்றும் 2 கார், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x