Published : 04 Aug 2021 03:21 AM
Last Updated : 04 Aug 2021 03:21 AM

விற்பனைக்காக ஆயிரக்கணக்கில் தயாராகி ஓராண்டாக காத்துக் கிடக்கும் விநாயகர் சிலைகள்: வாழ்வாதாரம் இழந்த பொம்மை தொழிலாளர்கள்

காஞ்சிபுரத்தில் கடந்த ஆண்டு செய்யப்பட்டு விற்பனை ஆகாமல் இருந்த நிலையில், மழைநீர் புகுந்ததால் சேதமடைந்த விநாயகர் சிலைகளை கவலையுடன் காட்டும் தொழிலாளர்கள். படங்கள்: எம்.முத்துகணேஷ்

காஞ்சிபுரம்

கரோனா பரவல் காரணமாகதமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்திக்கு கடந்த ஆண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளே இன்னும் விற்பனையாகாமல் உள்ளன. இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படுமா என்பது தெரியாத நிலையில் பொம்மை செய்யும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தை சுற்றியுள்ளபகுதிகளில் பொம்மை செய்யும்தொழிலில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 25 தொழிற்கூடங்களும் உள்ளன. தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் வைத்து வழிபட விநாயகர் சிலைகளை செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டன.

ஆனால், கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின்போது கரோனா பரவல் தீவிரமானதால் பொது இடங்களில் விநாயர் சிலைவைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது. இதனால், பல லட்சம் செலவில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேங்கின. விற்பனையாகாமல் இருந்த பொம்மைகளும் மழை நீரில் சேதமடைந்தன. இதனால் இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடைபெறவில்லை. இதனால் பொம்மைசெய்யும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வேலை இழந்துள்ளனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் களிமண், காகிதக் கூழ் பொம்மைதொழிலாளர்கள் குலாலர் நலச்சங்கத்தின் பொருளர் கே.ரமேஷ், துணைத் தலைவர் இ.வி.இஷ்டலிங்கம் கூறும்போது, “ஆண்டு முழுவதும் தொழில் செய்து ஆண்டுக்குஒருமுறை மட்டுமே வருமானம் ஈட்டும் தொழில் எங்களுடையது. விநாயகர் சதுர்த்தியின்போது மட்டுமே எங்களுக்கு வருமானம் கிடைக்கும். குறைந்தபட்சம் 3அடி உயர விநாயகர் சிலைகளைவைத்து வழிபடவும், தனிநபர் வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் விநாயகர் சிலைகள் வைத்துவழிபடவும், வீதிகளில் கரோனா விதிகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் வைக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும்.

ஏற்கெனவே சிலைகள் தேங்கிஉள்ள நிலையில் இந்த ஆண்டும்விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கிடைக்குமா என்பது தெரியாமல் சிலைகளை தயாரிக்காமல் உள்ளோம்” என்றனர். தற்போது தலைவர்களின் சிலைகள், நவராத்திரி கொலு சிலைகளை தயாரிக்கும் பணிகளில் மட்டும் ஈடுபட்டுள்ளனர். இதையும் விற்பனைசெய்வதற்கு போதிய வாய்ப்புகள் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர். இதற்கு விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதுடன்,கரோனா விதிகளைப் பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து ஆட்சியர் ஆர்த்தியிடம் கேட்டபோது, “கரோனா 3-வது அலை பரவினால் மக்கள் கூட்டம் கூடினால் பாதிப்பை ஏற்படுத்தும். விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்குவது குறித்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு அரசுதான் கொள்கை முடிவு எடுக்கும்.

ஆனால், பொம்மை தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்பட அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய உதவிகள் செய்யதயாராக இருக்கிறோம். அவர்கள்செய்யும் பொம்மைகளை மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில்கைவினைப் பொருட்களாக விற்பனை செய்ய அந்தத் துறை செயலரிடம் பேசியுள்ளேன். மேலும் நமது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொம்மைகளை விற்பனை செய்ய இடம் ஒதுக்கி தருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x