Published : 04 Aug 2021 03:21 AM
Last Updated : 04 Aug 2021 03:21 AM

கொடைக்கானலில் பூண்டு அறுவடை தொடக்கம்: விலை பாதியானதால் மலை விவசாயிகள் கவலை

மேல்மலைப் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மலைப்பூண்டு. (வலது) மலைப்பகுதியில் விளைந்த மலைப்பூண்டை விற்பனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக் கான‌ல் மேல்ம‌லைப் ப‌குதிக‌ளில் மலைப்பூண்டு அறுவடை தொடங்கியது. ஆனால், போதிய விளைச்சல் இல்லை. மேலும் கடந்த ஆண்டை விட, விலையும் குறைந்து விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான பூண்டி, மன்னவனூர், கவுஞ்சி, பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர், கிளாவரை உள்ளிட்ட கிராமங்களில் மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. மற்ற மலைகளில் விளையும் பூண்டுகளைவிட கொடைக் கானல் மலைப்பூண்டு அதிக மருத்துவத் தன்மை கொண்டது. நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம் கொண்டதால் கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. பயிரிட்ட 120 நாட்களில் மலைப்பூண்டு அறுவடைக்கு வரும். கொடைக் கானல் ம‌லைப் ப‌குதிக‌ளில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட மலைப்பூண்டுகள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதங்களில் அதிக மழை பெய்ததால் பூண்டு விளைச்சல் பாதித்தது. இதனால் போதிய விளைச்சல் இல்லாத நிலையில் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பூண்டு விளைச்சல் குறைவால் தேவை அதிகரித்து விலையும் அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மலைப்பகுதி விவசாயிகள் மேலும் ஏமாற்றத்துக் குள்ளாகினர். வெளி மாநிலங்களில் இருந்து பூண்டு வரத்தால் கொடைக் கானல் மலைப்பூண்டுக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒரு கிலோ மலைப் பூண்டு ரூ.250 முதல் ரூ. 300 வரை விற்றது. தற்போது ஒரு கிலோ மலைப்பூண்டு விலை பாதியாகக் குறைந்து ரூ.130 முதல் ரூ.150 வரை மட்டுமே விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x