Published : 03 Aug 2021 02:59 PM
Last Updated : 03 Aug 2021 02:59 PM

மருத்துவப் படிப்புகளில் 10% இடஒதுக்கீடு; மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழக இட ஒதுக்கீட்டு சட்டப்படி, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறிய சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று (ஆக. 03) விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீதிமன்ற அவமதிப்பு ஏதும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

ஆனால், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் குற்றம்சாட்டினார். தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யவே குழு அமைக்க உத்தரவிடப்பட்டதாகவும், மத்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் வாதிட்டார்.

தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை புறக்கணிக்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், மத்திய அரசின் குழுவும், உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன எனத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது மொத்த இட ஒதுக்கீடான 50 சதவீதத்துக்குள் வருகிறதா? இல்லையா? எனவும் மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் அவகாசம் வழங்க கோரியதை ஏற்று, வழக்கு விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரம் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x