Published : 03 Aug 2021 12:27 PM
Last Updated : 03 Aug 2021 12:27 PM

ஆண்களுக்குப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்

தமிழக முதல்வருக்கு இருக்கும் நற்பெயரைக் கெடுக்கவே, போக்குவரத்துத் துறை மீது ஓபிஎஸ் குற்றம் சொல்கிறார் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பேருந்துகளில், அந்த இழப்பை ஈடுசெய்யப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களிடம் குறைந்தபட்சக் கட்டணம் 5 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படுவதாக நேற்று (ஆக. 02) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருந்தார். இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மறுத்துள்ளார்.

ஓபிஎஸ்: கோப்புப்படம்

இது தொடர்பாக, சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று (ஆக. 03) செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. அதைக் கெடுப்பதற்காகத் தவறான தகவல்களை ஓ.பன்னீர்செல்வம் சொல்லி வருகிறார். அம்மாதிரி கட்டண உயர்வு எங்கும் இல்லை. எந்த மாநகராட்சியிலும் அப்படி வசூலிக்கப்படவில்லை.

போக்குவரத்துத் துறையில் 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் வேலை பார்க்கின்றனர். அப்படி ஏதாவது குறிப்பிட்டு புகார் கூறினால், எங்காவது தவறு நடந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இதுவரை அப்படி கட்டண உயர்வு, கட்டணத்தில் மாற்றம் எதுவும் கிடையாது. ஏற்கெனவே இருக்கும் கட்டணத்தில்தான் பயணிகள் பயணிக்கின்றனர்.

பெண்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிப்பது, 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதுதான் உண்மையான நிலைமை. திருவள்ளுவர் படம் வைத்து வண்டி (பேருந்து) அருமையாக ஓடுகிறது. எந்தவிதப் பிரச்சினையும் இல்லை.

போக்குவரத்துத் துறையில் முதல்வருக்கு உள்ள நல்ல பெயரை ஓ.பன்னீர்செல்வம் கெடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தான் இருப்பதை அவ்வப்போது காட்டிக் கொள்வதற்காக அறிக்கை விடுக்கிறார். இப்போது விடப்பட்டிருக்கும் அறிக்கை தவறானது.

குறிப்பிட்ட இடத்தில் தவறு நடந்திருந்தால், அதைச் சுட்டிக்காட்டினால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம். விழுப்புரத்தில் ஒரேயொரு இடத்தில் நடத்துநர் தவறு செய்திருப்பதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ஒட்டுமொத்தமாகவே தவறு நடப்பதாகச் சொல்வது தவறானது. அந்தத் தவறைப் பொதுமக்கள் சுட்டிக்காட்டினால் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதைத்தான் முதல்வர் சொல்லியிருக்கிறார், அதுதான் நடக்கிறது.

கட்டணம் உயர்த்தப்படும் என்ற பேச்சே இல்லை. ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டணம்தான் உள்ளது. எவ்வளவு நஷ்டம் வந்தாலும் அதனை அரசு ஏற்றுக்கொள்கிறது. மகளிருக்கு இலவசப் பயணத்துக்காக அரசு 1,200 கோடி ரூபாய் கொடுத்தது. இப்போது, ரூ.1,358 கோடி வந்திருக்கிறது. அதுசம்பந்தமாக முதல்வரிடம் பேசியிருக்கிறேன். அது அரசாங்கத்தின் பொறுப்பு. எவ்விதக் கட்டண உயர்வும் இல்லை. கட்டண மாற்றமும் இல்லை. எந்த மாநகராட்சியிலும் மாற்றம் இல்லை.

நேற்று வரை 47,846 திருநங்கைகளும் 4 லட்சத்து 43 ஆயிரத்து 163 மாற்றுத்திறனாளிகளும், அவர்களின் உதவியாளர்கள் 36 ஆயிரத்து 51 பேரும் இலவசமாகப் பயணித்துள்ளனர்.

விரைவில் மின்சாரப் பேருந்துகள் வாங்குவோம். தமிழகத்தில் கோவிட் பாதிப்பு குறைந்திருக்கிறது. பேருந்துகளில் ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன".

இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x