Published : 02 Aug 2021 04:58 PM
Last Updated : 02 Aug 2021 04:58 PM

ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரிய மனு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு குறித்து, வரும் 4-ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து, விழுப்புரத்தை தலையிடமாக கொண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம், முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது.

இந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரியும், பதிவாளரை நியமிக்கக் கோரியும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்துக்காக விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கர் நிலம் கடந்த அரசால் ஒதுக்கப்பட்ட போதும், தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்தில் செயல்படுவதாகவும், இன்னும் பல்கலைக்கழகத்துக்கு பதிவாளரும்,போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படாததால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டத்தை மீறிய செயல் எனவும், அந்த அறிவுப்புக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஆக. 02) விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஜெயலலிதா பல்கலைக்கழக வரம்புக்குள் வரும் பகுதிகளில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் படிப்புகளை வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கிய பின், துணைவேந்தர் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும், கட்டிடங்களும் கட்டப்படவில்லை, அடிப்படை வசதிகளும் இல்லை என்பதால், மாணவர்களின் நலன் கருதி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அரசின் கருத்துக்களை அறிந்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x