Published : 02 Aug 2021 04:07 PM
Last Updated : 02 Aug 2021 04:07 PM

மூன்றாம் பாலினத்தவருக்கு 3 மாதங்களில் கரோனா தடுப்பூசி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும், கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும், ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்கவும், தடுப்பூசி முகாம் நடத்தவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

அந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஆக. 02) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மூன்றாம் பாலினத்தவருக்கு கரோனா நிவாரண நிதியில் முதல் தவணை 2,000 ரூபாயை வழங்கிவிட்டதாகவும், இரண்டாம் தவணையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதனை ஏற்ற நீதிபதிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு இரண்டாம் தவணை வழங்கப்படும் என, அரசு உறுதி அளித்துள்ளதாக குறிப்பிட்டு, அவர்களுக்கு மூன்று மாதங்களில் தடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்ய அரசுக்கு உத்தரவிட்டு, கிரேஸ் பானு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x