Published : 02 Aug 2021 03:48 PM
Last Updated : 02 Aug 2021 03:48 PM

டெங்குவைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

டெங்குவைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் மற்றும் புதுவை அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில், 2019ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், சென்னையில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் டெங்கு பரவுவதால், அந்த வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (ஆக. 02) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் 402 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாத பாதிப்பு 54 பேர் என்று பெருமளவில் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மொத்தம் 52 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கபட்டது.

தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யபட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் டெங்குவைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x