Published : 02 Aug 2021 03:20 PM
Last Updated : 02 Aug 2021 03:20 PM

பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

ஓபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

மகளிருக்கான இலவசப் பயணத்தால் ஏற்படும் இழப்பு, ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஆக. 02) வெளியிட்ட அறிக்கை:

"அரசு உள்ளூர்ப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்வதற்கான அறிவிப்பு முதல்வரால் வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சில பகுதிகளில், பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பேருந்துகளில், அந்த இழப்பை ஈடுசெய்ய பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களிடம் குறைந்தபட்சக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றும், இதற்கு முன் 5 ரூபாய் என்பதுதான் குறைந்தபட்சக் கட்டணமாக இருந்தது என்றும், சட்டத்துக்குப் புறம்பாக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது என்றும், இதுகுறித்து போக்குவரத்துக் கழக நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தவறு சீர்செய்யப்படும் என்று பதில் அளித்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

மேலும், நகர்ப்புறப் பேருந்துகளைவிட புறநகர்ப் பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்றும், நகர்ப்புறப் பேருந்துகளில் மட்டும்தான் இலவசப் பயணம் அனுமதிக்கப்படுகிறது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர்ப் பேருந்துகளில் 'மகளிர் இலவசம்' என்ற பலகை வைக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், ஆனால், ஆண்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என்பதற்குப் பதிலாக 10 ரூபாய் என்று வசூலிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலவச மகளிர் பயணத்தை அனுமதிக்கும் பேருந்துகள் நகர்ப்புற பேருந்துகள் என்கின்ற போதும், ஆண்களிடம் குறைந்தபட்சக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றும், இதுபோன்ற விதிமீறல்கள் சர்வ சாதாரணமாக திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ராமச்சேரி, காஞ்சிப்பாடி, திருவாலங்காடு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழித்தடங்களில் நடைபெறுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

புறநகர்ப் பேருந்துகளில் சாதாரண மற்றும் விரைவுப் பேருந்துகள் என இரு வகைகள் இருக்கின்றன என்றும், விரைவுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், அந்தப் பேருந்துகள் பெரும்பாலும் அனைத்துப் பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தப்படுவதாகவும் பயண நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லையென்றும், அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக, பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதே முறை தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவித்துவிட்டு, அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய உத்திகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல். இது அரசாங்கத்துக்கு ஆட்சியாளர்களுக்குத் தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற கட்டண வசூல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மகளிருக்கான இலவசப் பயணத்தால் ஏற்படும் இழப்பு ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x