Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

விதிகளை நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம்; கரோனா 3-வது அலையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

கரோனா தொற்று குறைந்துவருவதை கருத்தில்கொண்டு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வுகளை அரசுஅறிவித்தது. இதனால், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்களில் கூடும்கூட்டம், 3-வது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், கடந்த 2, 3 நாட்களாக கரோனா குறித்து வெளியாகும் அரசின் அறிக்கைகளைப் பார்க்கும்போது 3-வது அலை தவிர்க்க முடியாததாகிவிடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 28-ம் தேதி 1,756-ஆக இருந்த கரோனா தொற்றுஎண்ணிக்கை 29-ல் 1,859-ஆகவும்,30-ம் தேதி 1,947 ஆகவும், 31-ம்தேதி 1,986 ஆகவும் உயர்ந்துள்ளது. ஏறத்தாழ 20 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, சென்னை, கோவை,ஈரோடு, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், திருவள்ளூர் மாவட்டங்களில்தான் கணிசமான அளவுக்கு கரோனா அதிகரித்துள்ளது. அரசின்கட்டுப்பாடுகளை சரியாக நடைமுறைப்படுத்தாததே இதற்கு காரணமாகும்.

மேலும், கேரள மாநிலத்தில் கரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. கேரளாவில் இருந்து கோவை, தேனி, கன்னியாகுமரி வழியாக தமிழகம் வருவோரை தீவிரமாக கண்காணிப்பது அவசியம்.

சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதும், சில வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

எனினும், தடை விதிக்கப்படாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறதா, அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளார்களா, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

கரோனா விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் நிலவுவதாகத் தெரிகிறது. எனவே,முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை 100 சதவீதம் உறுதி செய்து, 3-ம் அலையில் இருந்து தமிழக மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x