

சென்னை தியாகராய நகரில்உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பாஜக மாநில துணைத் தலைவர்வி.பி.துரைசாமி நேற்று கூறியதாவது:
மருத்துவக் கல்லூரி மாணவர்சேர்க்கைக்கான நீண்டகால பிரச்சினையை தீர்க்க, மருத்துவப்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, சமூக நீதிக் காவலராக பிரதமர் மோடி விளங்குகிறார்.
அனைவருக்கும் சமமான வாய்ப்பை பிரதமர் மோடி வழங்கி உள்ளார். இதற்கு, மாணவர்கள் மீது கொண்ட அக்கறைதான் காரணம்.
பாஜக ஒருபோதும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தது இல்லை. அது தற்போது மீண்டும்நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த அறிவிப்பு, தேர்தல்களுக்காக வெளியிடப்பட்டதும் அல்ல. சமூக நீதி என்பது ஒருகட்சிக்கோ, ஒரு குடும்பத்தாருக்கோ மட்டுமே சொந்தமானது இல்லை. சமூக நீதியை திமுக சொந்தம் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது.
ஆட்சி அமைத்து 85 நாட்கள் ஆகியும் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இருக்கும் ஒரே கட்சி திமுகதான். விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்து, தமிழர்கள் மீது கொண்ட அக்கறையை நிரூபிக்க வேண்டும்.
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழர் நலனை காப்பதில் பாஜக பாரபட்சமின்றி நேர்கோட்டில் உள்ளது என்பதைக் காட்டவே தஞ்சையில் வரும் 5-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளோம். தமிழக விவசாயிகளின் உரிமையை பாஜக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.